பிரசவம் நடந்த சிறிது நேரத்தில் இளம்பெண் திடீர் சாவு


பிரசவம் நடந்த சிறிது நேரத்தில் இளம்பெண் திடீர் சாவு
x
தினத்தந்தி 19 March 2019 10:45 PM GMT (Updated: 19 March 2019 9:18 PM GMT)

பிரசவம் நடந்த சிறிது நேரத்தில் இளம்பெண் திடீர் சாவு ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகை.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள மல்லப்பாடி கோகுல் நகரைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 29). இனிப்பு கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திவ்யாபாரதி (24). இவர்களுக்கு 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் திவ்யாபாரதி மீண்டும் கர்ப்பமானார். காப்பிணியான அவர் கப்பல்வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திவ்யாபாரதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதற்காக கப்பல்வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட அவர் பிறகு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சுக பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் திவ்யாபாரதி திடீரென இழந்தார். கப்பல்வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் அலட்சியத்தால் இவ்வாறு நடந்ததாக திவ்யாபாரதியின் உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.இது குறித்து நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அசோக்குமாரிடம் கேட்ட போது, கப்பல்வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலதாமதமாக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு திவ்யாபாரதியை பரிந்துரை செய்துள்ளனர். அவருக்கு உரிய சிகிச்சை அளித்தும் இறந்துள்ளார் என தெரிவித்தார். கப்பல்வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரி மீதும், கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் உள்ளவர்கள் கப்பல்வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மீதும் மாறி, மாறி புகார் தெரிவித்தனர். இது குறித்து கலெக்டர் பிரபாகரிடம் கேட்ட போது, திவ்யாபாரதி மரணம் குறித்து சென்னையில் உள்ள இயக்குனர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். பிரசவம் நடந்த சிறிது நேரத்தில் இளம்பெண் திடீரென இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

Next Story