பாலக்கோடு அருகே கொடூரம்: துப்புரவு பெண் பணியாளர் படுகொலை பரபரப்பு தகவல்கள்


பாலக்கோடு அருகே கொடூரம்: துப்புரவு பெண் பணியாளர் படுகொலை பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 19 March 2019 11:00 PM GMT (Updated: 19 March 2019 9:22 PM GMT)

பாலக்கோடு அருகே துப்புரவு பெண் பணியாளர் படுகொலை செய்யப்பட்டார்.

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சிக்கமாரண்டஅள்ளியை சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மனைவி வசந்தா (வயது 54). லட்சுமணன் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு சக்தி என்ற மகனும், சுமதி, மகேஸ்வரி ஆகிய 2 மகள்களும் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் ஆகி வெவ்வேறு இடங்களில் வசித்து வருகிறார்கள்.

வசந்தாவின் மகன் சக்தி, மருமகள் உமாதேவி ஆகியோர் சிக்கமாரண்டஅள்ளியிலேயே வசித்து வருகின்றனர். வசந்தா கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார். எனவே அவர் தினமும் தேன்கனிக்கோட்டைக்கு சென்று பணி செய்து விட்டு இரவில் வீட்டுக்கு வந்து விடுவார். இங்கு அவர் தனியாக வசித்து வந்தார்.

வழக்கம் போல் நேற்று முன்தினம் வசந்தா பணிக்கு சென்றார். அங்கு வேலை முடிந்த பின்னர் இரவு வீட்டிற்கு வந்தார். அங்கு தனியாக தூங்கி உள்ளார். நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் மகன் சக்தி வீட்டுக்கு வசந்தா சாப்பிட வராததால் மருமகள் உமாதேவி, வசந்தா வீட்டுக்கு சென்று பார்த்தார்.

அங்கு வசந்தா தலையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். தலை பகுதியில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில் இருந்தது. உடல் அரைநிர்வாண நிலையில் கிடந்தது. இதுபற்றி மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பாலக்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

கொலையில் துப்பு துலக்குவதற்காக மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது வசந்தா வீட்டில் இருந்து அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளம் வழியாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடியது. பின்னர் அங்குள்ள ரெயில்வே பாலத்தில் நின்று விட்டது. தடயவியல் நிபுணரும் வரவழைக்கப்பட்டார். அவர் அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தார். இதையடுத்து வசந்தா உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், பரபரப்பு தகவல்கள் வெளியானது. வசந்தா வீட்டுக்கு 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இரவு நேரங்களில் அடிக்கடி வந்து சென்றதாக கூறப்படுகிறது. அவர் யார்? எதற்காக வந்து சென்றார்? என்பது பற்றி போலீசார் விசாரிக்கிறார்கள். நகை, பணத்துக்காக வசந்தா கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணமா? என்பது பற்றியும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த கொடூர கொலை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story