மோட்டார் சைக்கிள் மோதி பெயிண்டர் சாவு - 2 பேர் காயம்


மோட்டார் சைக்கிள் மோதி பெயிண்டர் சாவு - 2 பேர் காயம்
x
தினத்தந்தி 19 March 2019 10:30 PM GMT (Updated: 19 March 2019 9:27 PM GMT)

வேலை முடிந்து நடந்து சென்ற பெயிண்டர், மோட்டார்சைக்கிள் மோதியதில் இறந்தார். அவருடன் சென்ற அவரது நண்பர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.

தூசி,

தூசி அருகே உள்ள மத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் செந்தில்குமார் (வயது 36), பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரேகா (32). இவர்களுக்கு காவ்யா (8) என்ற மகள் உள்ளாள்.

செந்தில்குமார் தினமும் காலை 8 மணிக்கு வேலைக்காக காஞ்சீபுரத்துக்கு சென்றுவிட்டு இரவு 10 மணிக்கு மேல்தான் வீட்டிற்கு திரும்புவார்.

நேற்று முன்தினம் செந்தில்குமார் அதே கிராமத்தை சேர்ந்த அவரது நண்பர்கள் கங்காதரன், நாகப்பன் ஆகியோருடன் வேலைக்காக காஞ்சீபுரத்திற்கு சென்றார். அங்கு வேலை முடிந்தபின் 3 பேரும் இரவு பஸ்சில் ஊருக்கு புறப்பட்டனர். 10.30 மணிக்கு மாங்கால் கூட்ரோட்டில் இறங்கிய அவர்கள் மத்தூர் கிராமத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பின்னால் வந்த மோட்டார்சைக்கிள் அவர்கள் 3 பேர் மீதும் மோதியது. இதில் செந்தில்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற 2 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. 3 பேரையும் அந்த பகுதியில் இருந்தவர்கள் காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அவர்களில் செந்தில்குமார், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்து விட்டார். இது குறித்த புகாரின்பேரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story