இரவு 1 மணி வரை கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தல்


இரவு 1 மணி வரை கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 March 2019 11:00 PM GMT (Updated: 19 March 2019 9:48 PM GMT)

இரவு 1 மணி வரை கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு கிராம கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு நாட்டுப்புற அனைத்து கலைஞர்கள் ஒருங்கிணைப்பு சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சின்னப்பொண்ணு தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சித்தன் ஜெயமூர்த்தி, ஆலோசகர் ராஜேந்திரன் தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தமிழக மக்களின் கலாசாரமான கிராமிய கலை நிகழ்ச்சிகள் ஆண்டிற்கு 5 மாதங்கள் மட்டுமே நடக்கும். இந்த வருவாயை கொண்டுதான் ஆண்டு முழுவதும் படிப்பு, வாடகை, உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் செய்து வருகிறோம். இந்த சூழலில் தேர்தலை காரணம் காட்டி இரவு 10 மணிக்குள் நிகழ்ச்சிகளை முடிக்க போலீசார் நிர்ப்பந்திப்பதால் நிகழ்ச்சியை ஒப்பந்தம் செய்தவர்கள் ரத்து செய்து வருகிறார்கள்.

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள 3 லட்சம் நாட்டுப்புற மற்றும் கிராமிய கலைஞர்கள் பெரும் பாதிப்புக்குஉள்ளாகி உள்ளனர். எனவே நாட்டுப்புற கலைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் கலை நிகழ்ச்சிகளை இரவு 1 மணி வரை நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.

ஆண்டுக்கு 4 பேருக்கு வழங்கப்படும் கலைமாமணி விருது கடந்த 8 ஆண்டுகளில் 14 பேருக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 18 பேருக்கு வழங்க வேண்டி உள்ளது. எனவே தமிழக அரசு கலைகளின் முன்னோடிகளை கண்டறிந்து அவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில செயலாளர் ராசி.மணிவாசகம், பொருளாளர் கயல், கோபு, துணை செயலாளர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story