நாங்கள் எதிர்பார்க்கும் சின்னம் 25-ந் தேதி கிடைக்கும்: அ.ம.மு.க. மாபெரும் வெற்றியை பெறும் டி.டி.வி.தினகரன் பேட்டி


நாங்கள் எதிர்பார்க்கும் சின்னம் 25-ந் தேதி கிடைக்கும்: அ.ம.மு.க. மாபெரும் வெற்றியை பெறும் டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 20 March 2019 11:15 PM GMT (Updated: 20 March 2019 6:38 PM GMT)

நாங்கள் எதிர்பார்க்கும் சின்னம் 25-ந் தேதி கிடைக்கும். அ.ம.மு.க. மாபெரும் வெற்றியை பெறும் என தஞ்சையில், டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

தஞ்சாவூர்,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதாவுக்கு துரோகம்

திருவாரூர் இடைத்தேர்தலில் நிற்கவே பயந்த மாபெரும் பயில்வான் கூட்டணி(அ.தி.மு.க) தான் இந்த தேர்தலில் தனியாக நிற்பதற்கு பயந்து கூட்டணி அமைத்து இருக்கிறார்கள். நாங்கள் யாருடனும் கூட்டணிக்கு போகமாட்டோம் என சொல்லி விட்டோம். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவருக்கு நினைவு மண்டபம் கட்டக்கூடாது என்று கூறிய கட்சியுடன் எப்படி கூட்டணி சேர முடியும். சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறக்கக்கூடாது என்று கூறிய கட்சியுடன் கூட்டணி போடும் அளவுக்கு சாணக்கியத்தனம் எங்களுக்கு கிடையாது.

நான் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டபோதுதான் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் எல்லோரும் புறமுதுகை காட்டி ஓடினார்கள். ஜெயலலிதா யாரையெல்லாம் வேண்டாம் என்று சொன்னாரோ அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளனர். ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்யும் அளவுக்கு கூட்டணி வைத்துள்ளனர். இந்த துரோக கூட்டணிக்கு மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள். மற்றொரு பயில்வான் கூட்டணியும்(தி.மு.க) திருவாரூர் இடைத்தேர்லில் நிற்க பயந்த கூட்டணி தான்.

மாபெரும் வெற்றியை பெறும்

தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் ஆதரவு கிடையாது. செல்வாக்கு கிடையாது. தமிழக மக்கள் மீது அவர்களுக்கு அக்கறை கிடையாது. அதனால்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளில் அ.தி.மு.க.வை வெற்றி பெற வைத்தனர். தனது இறுதி மூச்சு இருக்கும் வரை தமிழக மக்களின் நலனுக்காக ஜெயலலிதா பாடுபட்டார். ஜெயலலிதா உயிருடன் இல்லையென்றாலும் அவரது 95 சதவீத தொண்டர்களுடன் இயங்கக்கூடிய அ.ம.மு.க. மாபெரும் வெற்றியை பெறும்.

வருகிற 27-ந் தேதி முதல் நான் பிரசாரத்தை தொடங்க இருக்கிறேன். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை ஒரு பட்டாணி அறிக்கை. மக்களை ஏமாற்றவதற்காக போடக்கூடிய இவர்களது ஆட்டம் இந்த தேர்தலோடு முடிந்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வாரிசு அரசியல்

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு

கேள்வி: ஆர்.கே.நகர் வெற்றியைப்போல் இந்த தேர்தலில் வெற்றி பெறுவீர்களா?

பதில்: மாபெரும் வெற்றியை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பெறும். அரசியல் கட்சிகள் வேண்டுமானால் எங்களுக்கு எதிராக இருக்கலாம். மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். பலர் மக்களை முட்டாள்களாக நினைத்து பல வியூகங்களை அமைக்கின்றனர். மக்கள் எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். மக்கள் யார் பக்கம் என்பதை மே 23-ந் தேதி நீங்கள் எல்லோரும் தெரிந்து கொள்வீர்கள்.

கேள்வி: வாரிசு அரசியலை ஓ.பன்னீர்செல்வம் எதிர்த்துவிட்டு அவரது மகனுக்கு தேர்தலில் போட்டியிட சீட்டு கொடுத்து இருக்கிறாரே?

பதில்: அறிவுரை மற்றவர்களுக்கு மட்டும் தான். அவர்களுக்கு கிடையாது. பதவிக்கு வருவதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாம். தனக்கு அது பொருந்தாது.

எதிர்பார்த்த சின்னம்

கேள்வி: உங்கள் கட்சி பதிவு செய்யப்படாதவை என சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறாரே?

பதில்: எதற்காக பதிவு செய்யவில்லை. அது உங்கள் எல்லோருக்கும் தெரியும். சுப்ரீம் கோர்ட்டு என்ன சொல்லி இருக்கிறது என்றால் அ.தி.மு.க.வில் உள்ள ஒரு அணிதான் எங்கள் பொதுச் செயலாளர் தலைமையிலான அணி. எங்கள் உரிமைக்காக போராடும் வரை நாங்கள் கட்சி ஆரம்பிக்க முடியாது. கட்சியை பதிவு செய்தால் உரிமை போய்விடும். அது எல்லோருக்கும் தெரியும். வருகிற 25-ந் தேதி எங்கள் அணிக்கு எதிர்பார்த்த சின்னம் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story