போலி அனுமதி சீட்டை பயன்படுத்தி மணல் அள்ளிய 3 பேர் கைது லாரி பறிமுதல்


போலி அனுமதி சீட்டை பயன்படுத்தி மணல் அள்ளிய 3 பேர் கைது லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 20 March 2019 11:00 PM GMT (Updated: 20 March 2019 6:58 PM GMT)

கீழ்வேளூர் அருகே போலி அனுமதி சீட்டை பயன்படுத்தி மணல் அள்ளிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்படி, உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின் பேரில் கீழ்வேளூர் அருகே ராதாமங்களம் மெயின் சாலையில் நாகை தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்தனர். சோதனையில், கோகூர் அருகே நாங்குடி கிராமத்தில் உள்ள மணல் குவாரியில் இருந்து மணல் அள்ளியது தெரியவந்தது. பின்னர் போலீசார் லாரியில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் லாரி டிரைவர் செம்பியன்மகாதேவி திருப்பத்திகோட்டூரை சேர்ந்த மனோகரன் (வயது 38), வாகன உரிமையாளரான நிறுத்தனமங்கலம் கீழத்தெருவை சேர்ந்த ரஞ்சித் (35), குவாரி உரிமையாளர் திருவாரூர் மேட்டுப்பாளையம் பெரியார் தெருவை சேர்ந்த குமரன் (53) ஆகியோர் என்பதும், இவர்கள் உரிய அனுமதியின்றி போலி அனுமதி சீட்டை பயன்படுத்தி மணல் அள்ளி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர்.

Next Story