மனைவியை கொன்ற விவசாயி கைது சொத்தை எழுதி கேட்டதால் ஆத்திரம்


மனைவியை கொன்ற விவசாயி கைது சொத்தை எழுதி கேட்டதால் ஆத்திரம்
x
தினத்தந்தி 20 March 2019 11:00 PM GMT (Updated: 20 March 2019 7:43 PM GMT)

துறையூர் அருகே தந்தையின் சொத்தை எழுதி கேட்டதால் ஆத்திரமடைந்த விவசாயி தனது மனைவியை வெட்டிக்கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த பகளவாடி காட்டு கொட்டத்தை சேர்ந்தவர் அழகுமலை(வயது 45). விவசாயி. இவருடைய மனைவி சுசீலா(40). இவர்களின் மகன் யுவராஜ்(18). மகள் சினேகா(15). கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதன் காரணமாக கணவரை பிரிந்து, மூவானூர் கீளூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் கடந்த 15 ஆண்டுகளாக குழந்தைகளுடன் சுசீலா வசித்து வந்தார்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அழகுமலையின் தந்தை வீரப்பன் இறந்து விட்டார். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். அப்போது துக்கம் விசாரிப்பதற்காக கணவர் வீட்டுக்கு வந்த சுசீலா, குழந்தைகளுடன் அங்கேயே தங்கிவிட்டார்.

இந்தநிலையில் நேற்று காலை மாமனாரின் பெயரில் உள்ள 5 ஏக்கர் நிலத்தை குழந்தைகளின் பெயரில் எழுதி வைக்குமாறு தனது கணவரிடம் சுசீலா கூறியுள்ளார். இதனால் அவர் களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த அழகுமலை, வீட்டில் இருந்த மண்வெட்டியால் தனது மனைவி சுசீலாவை வெட்டிக்கொலை செய்தார். இதுபற்றி தகவல் அறிந்த புலிவலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

பின்னர், சுசீலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில், புலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அழகுமலையை கைது செய்தனர். சொத்தை எழுதி கேட்டதால் மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story