பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் பங்குனி உத்திர தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் பங்குனி உத்திர தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 20 March 2019 10:30 PM GMT (Updated: 20 March 2019 7:52 PM GMT)

பெரம்பலூரில் உள்ள மதனகோபாலசுவாமி கோவிலில் நடைபெற்ற பங்குனி உத்திர தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் உள்ள மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் தாயார் சன்னதியில் கடந்த 18-ந் தேதி மாலை நடந்தது. நேற்று முன்தினம் வெண்ணெய்தாழி உற்சவமும், இரவு குதிரை வாகனத்தில் வீதிஉலாவும் நடந்தது. இதையடுத்து நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி மதனகோபால சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார் உற்சவ சிலைகளுக்கு பல்வேறு மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டு, ரதாரோஹன நிகழ்ச்சி நடைபெற்ற பின் காலை 10 மணி அளவில் தேரோட்டம் நடைபெற்றது.

வண்டிக்கால் பார்த்தல் நிகழ்ச்சி

அப்போது இதில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். சஞ்சீவிராயன்கோவில் தெரு, தெற்குத்தெரு, அய்யப்பன் கோவில் வழியாக சென்ற தேர் மதியம் 1 மணி அளவில் பழைய நகராட்சி அலுவலகம் அருகே நிறுத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு தேர் கடைவீதி மற்றும் சஞ்சீவிராயன் கோவில் தெரு வழியாக இழுத்துவரப்பட்டு மாலை 6 மணி அளவில் தேர் அதன் நிலையை அடைந்தது. தேரோட்டத்தையொட்டி கடை வியாபாரிகள் தண்ணீர் தெளித்து கோலமிட்டு சீர் வரிசைகளை வழங்கி மதனகோபால சுவாமி மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயாரை வழிபட்டனர். தேர் நிலையில்நின்ற பின்பு தீர்த்தவாரியும், வண்டிக்கால் பார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது.

திரளான பக்தர்கள்...

தேரோட்டத்தின் போது வழி நெடுகிலும் கோவில் அர்ச்சகர் பட்டாபிராமன் பட்டாச்சாரியார் தலைமையில், சென்னை திருமழிசைஆழ்வார் கோவில் பட்டாச்சாரியார் திரிவிக்ரமன், நாமக்கல் சேஷாத்திரி பட்டாச்சாரியார் குழுவினர் பொதுமக்களிடம் இருந்து சீர்வரிசைகளை ஏற்று சிறப்பு வழிபாட்டை நடத்தி வைத்தனர். தேரோட்டத்தில் பெரம்பலூர் எம்.எல்.ஏ. இளம்பை தமிழ்ச்செல்வன், இந்துசமய அறநிலையத்துறை அரியலூர் உதவி ஆணையர் முருகையா, கோவில் செயல் அலுவலர் மணி, கோவில் முன்னாள் அறங்காவலர்கள் வைத்தீஸ்வரன், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட இணை செயலாளர் சாய்சங்கீத் ரவி, நாயுடுபேரவை மாநில பொறுப்பாளர் ஜி.கண்ணன், மாவட்ட வணிகர் நலச் சங்க தலைவர் சத்யா நடராஜன், ஆடிப்பெருக்கு ஆஞ்சநேயர் ஊர்வல கமிட்டி தலைவர் கீற்றுக்கடை குமார், பூக்கடை சரவணன் மற்றும் வர்த்தகர்கள், பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

புன்னைமர வாகனத்தில் வீதிஉலா

இன்று (வியாழக்கிழமை) காலை துவாதச ஆராதனம், இரவு சப்தா வரணம் நிகழ்ச்சியும், நாளை (வெள்ளிக்கிழமை) காலை ஸ்நபன திருமஞ்சனம், இரவு புன்னைமர வாகனத்தில் வீதிஉலா நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை மட்டையடி, இரவு ஊஞ்சல் உற்சவமும், வருகிற 24-ந் தேதி காலை மஞ்சள் நீர், இரவு விடையாற்றிவிழாவும் நடக்கிறது. வருகிற 27-ந் தேதி காலை 10 மணிக்கு பெருமாள் திருமஞ்சனம், இரவு பெருமாள் ஏகாந்தசேவையுடன் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. தேர்த்திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கோவில் சீர்பணியாளர்கள், கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.


Next Story