6–ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் கைது


6–ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் கைது
x
தினத்தந்தி 20 March 2019 10:45 PM GMT (Updated: 20 March 2019 10:38 PM GMT)

புதுச்சேரியில் 6–ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி,

புதுச்சேரி சண்முகாபுரத்தை சேர்ந்தவர் நெப்போலியன் (வயது 26). தனியார் பள்ளி டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர். தன்னிடம் பயிற்சிக்கு வந்த 6–ம் வகுப்பு மாணவிக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் புதுவை குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் குழந்தை நல பாதுகாப்பு குழுவின் தலைவர் ராஜேந்திரன் விசாரணை நடத்தினார். விசாரணையில் பயிற்சியாளர் நெப்போலியன் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருப்பது உண்மை என தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து புதுவை சட்டம்–ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தாவிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்றுக்கொண்ட அவர், இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க முதலியார்பேட்டை போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்–இன்ஸ்பெக்டர் வீரபுத்திரசாமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பயிற்சியாளர் நெப்போலியனை கைது செய்தனர். பின்னர் புதுச்சேரி நீதிமன்றத்தில் நெப்போலியனை போலீசார் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் நேற்று அடைத்தனர்.


Next Story