தஞ்சையில், ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3 லட்சம் பித்தளை-வெள்ளி பொருட்கள் பறிமுதல்


தஞ்சையில், ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3 லட்சம் பித்தளை-வெள்ளி பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 21 March 2019 11:15 PM GMT (Updated: 21 March 2019 6:54 PM GMT)

தஞ்சையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3½ லட்சம் மதிப்புள்ள பித்தளை-வெள்ளி பொருட்களையும், ரூ.2¼ லட்சத்தையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம்(ஏப்ரல்) 18-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படையினர், நிலையான கண்காணிப்புக்குழுவினர் ஆங்காங்கே வாகன சோதனை மற்றும் சந்தேகப்படும் இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதன்படி தேர்தல் பறக்கும்படை தாசில்தார் திருஞாசுஜாதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜான்கென்னடி, ராஜ்குமார், ஏட்டு கலைச்செல்வன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தஞ்சை புதிய பஸ் நிலையம் பகுதியில் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து கும்பகோணத்திற்கு செல்லும் ஒரு ஆம்னி பஸ் வந்தது. அப்போது பறக்கும்படை குழுவினர் சந்தேகத்தின் பேரில் அந்த பஸ்சை நிறுத்தி பஸ்சில் பொருட்கள் வைக்கும் இடத்தை திறந்து சோதனை செய்தனர்.

அப்போது அந்த பஸ்சில் 8 பார்சல்கள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் பித்தளை விளக்குகள், தட்டுகள், பித்தளை மணிகள், வெள்ளி குத்துவிளக்குகள் ஆகியவை இருந்தது. இது குறித்து பறக்கும்படையினர், பஸ் டிரைவரிடம் கேட்டபோது, அவர் அந்த பார்சல்கள், கும்பகோணத்தில் உள்ள ஒரு மெட்டல் கம்பெனிக்கு கொண்டு செல்வதாக கூறி அதற்கான ரசீதை காட்டினார். அதை அதிகாரிகள் பார்த்தபோது அதில் 2 பார்சல்களுக்கு மட்டுமே ரசீது இருந்தது. மற்ற 6 பார்சல்களுக்கு ரசீது எதுவும் இல்லை.

அதில் இருந்த பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். இதையடுத்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை தஞ்சை சட்டசபை தொகுதி தேர்தல் அதிகாரி அலுவலகமான ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.

இந்த பொருட்களுக்கு உரிய ஆவணங்களை கொண்டு வந்து காட்டி விட்டு எடுத்துச்செல்லாம் எனவும், ஆவணங்கள் இல்லாவிட்டால் பொருட்கள் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தஞ்சை எம்.கே.மூப்பனார் சாலையில் வட்டார வளர்ச்சி அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் நாராயணமூர்த்தி, கணேசன், கல்யாணசுந்தரம் ஆகியோர் கொண்ட பறக்கும்படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வந்தார். அந்த மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் மஞ்சள் நிறத்தில் பை இருந்தது.

அந்த பையை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் ரூ.2 லட்சத்து 39 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. அவரிடம் விசாரணை நடத்தியபோது அவரது பெயர் முகமது தாரிக் (வயது 25) என்றும், தஞ்சை கீழவாசல் எஸ்.என்.எம். நகரை சேர்ந்தவர் எனவும் தெரிய வந்தது.

அந்த பணம் குறித்து அவரிடம் கேட்டபோது, தஞ்சையில் உள்ள ஒரு துணிக்கடையில் வசூலான பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக எடுத்துச்செல்வதாக அவர் கூறினார். ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அதிகாரிகள் குழுவினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து தஞ்சை ஆர்.டி.ஒ. அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story