கடலூரில் சாலை விரிவாக்க பணியின் போது குடிநீர் குழாயில் உடைப்பு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் பாதிப்பு


கடலூரில் சாலை விரிவாக்க பணியின் போது குடிநீர் குழாயில் உடைப்பு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 23 March 2019 10:30 PM GMT (Updated: 23 March 2019 7:18 PM GMT)

கடலூரில் சாலை விரிவாக்க பணியின் போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டார்கள்.

கடலூர்,

கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் அரசு தலைமை மருத்துவமனை அருகில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சாலையோரம் வடிகால் அமைப்பதற்காக பள்ளம் தோண்டியபோது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து குழாயில் இருந்து வெளியேறிய தண்ணீரால் பள்ளம் நிரம்பி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

இதுபற்றிய தகவல் அறிந்து நகராட்சி பொறியாளர் ராமகிருஷ்ணன், இளநிலை பொறியாளர் ஜெயபிரகாஷ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, குழாய் உடைந்த பகுதியை பார்வையிட்டனர்.

தீபன்நகர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த வழியாக வினியோகிக்கப்பட்ட குடிநீர் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

இதன் காரணமாக வில்வநகர், வள்ளலார் நகர் மற்றும் அழகப்பாநகர் ஆகிய பகுதிகளில் நேற்று குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து நகராட்சி குடிநீர் வாகனங்கள் மூலம் அந்தந்த பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. மேலும் சில பகுதிகளில் தனியார் குடிநீர் வாகனங்களில் பொதுமக்கள் காசு கொடுத்து குடிநீர் வாங்கினர்.

பின்னர் உடைந்த குழாயை சரிசெய்ய நகராட்சி ஊழியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து உடைந்த குழாயை சரிசெய்யும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது இன்று ( அதாவது நேற்று) மாலைக்குள் உடைந்த குழாயை சரிசெய்யும் பணி முடிவடைந்துவிடும். நாளை(இன்று) வழக்கம்போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றார்.

தற்போது கோடை காலம் என்பதால் பல இடங்களில் குடிநீர் பிரச்சினை தலைதூக்க தொடங்கிவிட்டது. இதுபோன்ற நிலையில் கடலூரில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகியது மக்களை வேதனையடைய வைத்துள்ளது. மேலும் இதுபோன்று குடிநீர் குழாய் உடைப்பு என்பது கடலூரில் தொடர்கதையாகி வருகிறது. தண்ணீர் தேவையின் அவசியத்தை அறிந்து இனி இதுபோன்று குழாய் உடைப்பு சம்பவங்கள் நடக்காமல் அதிகாரிகள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Next Story