ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செஞ்சி ஏழுமலையை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு


ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செஞ்சி ஏழுமலையை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
x
தினத்தந்தி 23 March 2019 10:45 PM GMT (Updated: 23 March 2019 7:27 PM GMT)

அ.தி.மு.க. வேட்பாளர் செஞ்சி ஏழுமலையை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

செஞ்சி,

ஆரணி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செஞ்சி வெ.ஏழுமலை அறிமுக கூட்டம் செஞ்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். செஞ்சி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கோவிந்தசாமி, மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் புண்ணியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செஞ்சி நகர செயலாளர் பிரித்விராஜ் வரவேற்றார்.

கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம், அ.தி.மு.க. வேட்பாளர் செஞ்சி வெ.ஏழுமலையை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

அ.தி.மு.க. பல தேர்தல்களை சந்தித்துள்ளது. ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடக்கிற முதல் தேர்தல் இதுவாகும். அதனால் இந்த தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பல்வேறு சூழ்ச்சிகளுக்கு மத்தியில் ஜெயலலிதாவின் ஆசியோடு 2 ஆண்டாக அ.தி.மு.க. ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் மற்றும் 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் போட்டியிட வலுவான கூட்டணி அமைத்துள்ளோம். இது வெற்றி கூட்டணி. ஆரணி தொகுதியில் போட்டியிடும் செஞ்சி வெ.ஏழுமலையை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன், பா.ம.க. முன்னாள் எம்.பி. துரை, எம்.எல்.ஏ. தூசிமோகன், பா.ம.க. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், தே.மு.தி.க. பார்த்தசாரதி, சிவக்குமார், பா.ஜ.க. மாவட்ட செயலாளர் விநாயகம், பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், பா.ம.க. கனல்பெருமாள், த.மா.கா. மாநில துணை பொதுச்செயலாளர் வி.பி.என்.கோபிநாத், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் வி.ரங்கநாதன், அனந்தபுரம் அரிராமன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story