கார் மீது பஸ் மோதல்: திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற புதுமாப்பிள்ளை பலி


கார் மீது பஸ் மோதல்: திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற புதுமாப்பிள்ளை பலி
x
தினத்தந்தி 23 March 2019 11:00 PM GMT (Updated: 23 March 2019 7:44 PM GMT)

குளித்தலை அருகே கார் மீது பஸ் மோதியதில் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற புதுமாப்பிள்ளையும், மணப்பெண்ணின் தந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குளித்தலை,

கோவையில் இருந்து கரூர் மாவட்டம் குளித்தலை வழியாக நேற்று திருச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதேபோல திருச்சியில் இருந்து நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. குளித்தலை அருகே உள்ள கீழகுறப்பாளையம் பிரிவு சாலையில் சென்றபோதுஅரசு பஸ், கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் திருமுருகன் (வயது 27), அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவரான சரவணன் (21), திருச்சி உறையூர் அருகே உள்ள நவாப்தோட்டத்தை சேர்ந்த கண்ணன் (50), அவரது மனைவி சாந்தி (42) ஆகியோர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி

தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் காரின் இடிபாடுகளில் சிக்கி கிடந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் திருமுருகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். பலத்த காயமடைந்த கண்ணன், சாந்தி மற்றும் சரவணன் ஆகிய 3 பேரும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். சாந்தி, சரவணன் ஆகிய இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரு வாரத்தில் திருமணம்

திருமுருகனுக்கு வருகிற 31-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது. இதனால், மணமகளின் வீட்டிற்கு சென்று திருமண அழைப்பிதழ் கொடுத்து விட்டு, பின்னர் தன்னுடைய நெருங்கிய உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க மணப்பெண்ணின் தந்தையான கண்ணன் மற்றும் தாய் சாந்தி ஆகியோரை திருமுருகன் காரில் அழைத்துக்கொண்டு, தனது ஊருக்கு சென்றபோதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. திருமுருகன் இறந்த செய்தி அறிந்து குளித்தலை அரசு மருத்துவமனைக்கு வந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த விபத்தில் புதுமாப்பிள்ளை மற்றும் மணமகளின் தந்தை ஆகியோர் உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story