வாழப்பாடியில் தேர்தல் பிரசாரம்: அ.தி.மு.க. காமெடி கூட்டணி உதயநிதி ஸ்டாலின் பேச்சு


வாழப்பாடியில் தேர்தல் பிரசாரம்: அ.தி.மு.க. காமெடி கூட்டணி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 23 March 2019 11:15 PM GMT (Updated: 23 March 2019 9:22 PM GMT)

அ.தி.மு.க. காமெடி கூட்டணி வைத்துள்ளதாக வாழப்பாடியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

வாழப்பாடி,

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பொன் கவுதம சிகாமணியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பிரதமர் மோடி 5 ஆண்டுகளுக்கு முன்பு நம்மிடம் வாக்குறுதி அளித்தார். அதாவது உங்களது வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் செலுத்துவதாக கூறினார். ஆனால் செலுத்தவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு 48 முறை சுற்றுப்பயணம் செய்து உலக சாதனை படைத்த தலைவர் மோடி. அப்படிப்பட்ட பிரதமர் தமிழ்நாட்டுக்கு இதுவரை எத்தனை முறை வந்துள்ளார்? 4 முறை தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையை பார்த்து அ.தி.மு.க.வினர் மிரண்டு போயுள்ளனர். தி.மு.க. தேர்தல் அறிக்கைதான் ஹீரோ. அன்புமணி, நோட்டுக்காகவும், சீட்டுக்காகவும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளார். அ.தி.மு.க. கூட்டணி மெகா கூட்டணி அல்ல, அது காமெடி கூட்டணி.

ராமதாஸ் ஒரு பேட்டியின்போது மோடிக்கும், அ.தி.மு.க. ஆட்சிக்கும் என்ன மதிப்பெண் போட்டுள்ளர்கள்? என்று கேட்டதற்கு ஜீரோ மதிப்பெண் கொடுப்பதாக சொன்னார். இதன்பின்னர் நிருபர் திருப்பி கேட்டதற்கு இதற்கு மேல் எதுவும் கொடுக்க முடியாது, என்று சொன்னார். ஆனால் அதே கட்சியோடு தற்போது கூட்டணி வைத்துள்ளார்.

அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பேராசிரியை நிர்மலாதேவி தன் கல்லூரியில் படிக்கும் மாணவிகளை உல்லாசத்துக்கு அழைத்து மிரட்டிய சம்பவம் நீங்கள் அறிந்ததே.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

கியாஸ் விலை மோடி ஆட்சியில் மூன்று, நான்கு மடங்கு அதிகமாகி உள்ளது. பெட்ரோல், டீசல் விலையும் பலமடங்கு அதிகமாக உள்ளது. ‘நீட்‘ தேர்வு விவகாரத்தில் நம்மை ஏமாற்றிய மோடிக்கு ஏப்ரல் 18-ந் தேதி வாக்குப் பதிவு மூலம் முடிவு கட்ட வேண்டிய நாள். எனவே நமது தி.மு.க. வேட்பாளர் பொன்.கவுதம சிகாமணிக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Next Story