பஸ் சக்கரங்களில் சிக்கி வாலிபர் பலி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பரிதாபம்


பஸ் சக்கரங்களில் சிக்கி வாலிபர் பலி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பரிதாபம்
x
தினத்தந்தி 24 March 2019 10:15 PM GMT (Updated: 24 March 2019 7:23 PM GMT)

அய்யம்பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர், பஸ் சக்கரங்களில் சிக்கி பலியானார்.

அய்யம்பேட்டை,

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள பூஞ்சேரியை சேர்ந்தவர் குமரேசன். இவருடைய மகன் தமிழழகன் (வயது27). இவருடைய உறவினர் பசுபதிகோவில் குச்சிபாளையத்தை சேர்ந்த சந்திரசேகரன் மகன் வெங்கடேசன் (32). இவர்கள் இருவரும் நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் பள்ளி அக்ரஹாரத்துக்கு சென்றனர்.

பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை தமிழழகன் ஓட்டி வந்தார். வெங்கடேசன் பின்னால் அமர்ந்து இருந்தார். அய்யம்பேட்டை அருகே தண்டாங்கோரை என்ற இடத்தில் வந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து வெங்கடேசன் தவறி கீழே சாலையில் விழுந்தார்.

அப்போது அந்த வழியாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு கும்பகோணத்தில் இருந்து தஞ்சை நோக்கி வந்த பஸ் வெங்கடேசன் மீது ஏறியது. இதில் பஸ் சக்கரங்களில் சிக்கி வெங்கடேசன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இதுபற்றி தகவல் அறிந்த அய்யம்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story