தம்பிதுரையிடம் இருந்து ரூ.1,000-க்கு குறைவாக வாங்காதீர்கள் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேச்சால் சர்ச்சை


தம்பிதுரையிடம் இருந்து ரூ.1,000-க்கு குறைவாக வாங்காதீர்கள் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேச்சால் சர்ச்சை
x
தினத்தந்தி 26 March 2019 11:15 PM GMT (Updated: 26 March 2019 7:41 PM GMT)

தம்பிதுரையிடம் இருந்து ரூ.1,000-க்கு குறைவாக வாங்காதீர்கள் என்று கரூரில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கரூர்,

கரூர் மனோகரா கார்னர் ரவுண்டானா அருகே தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. விழாவில் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி பேசியதாவது:-

நாடாளுமன்ற துணை சபாநாயகர் நிலையில் உள்ள தம்பிதுரை, தனது தொகுதி மேம்பாட்டு நிதியை கூட சரியாக பயன்படுத்தவில்லை. காரும், கொடியும் தான் இருக்கிறது, எனக்கு அதிகாரம் இல்லை என்று மக்களிடம் கூறியவர், தற்போது எதை வைத்து வாக்கு கேட்க செல்வார் என்று பார்ப்போம். கடந்த 2 நாடாளுமன்ற தேர்தல்களில் அவருக்கு ஆதரவாக உங்களிடம் வாக்கு சேகரித்ததற்காக என்னை மன்னித்து விடுங்கள்.

நாடாளுமன்ற நிதியை தவிர மத்திய அரசிடம் இருந்து கூடுதலாக என்ன சிறப்பு திட்டத்தை கரூருக்கு கொண்டு வந்தார் என்பது பற்றி பொதுமேடையில் அவர் விவாதிக்க தயாரா?. கரூர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதால் நாங்கள் (தி.மு.க.) சோர்வடைய வாய்ப்புள்ளதாக கூறுவது தவறு. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கட்டளையிட்டிருப்பதால், காங்கிரஸ் வேட்பாளரை 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய கடுமையாக களப்பணியாற்றுவோம்.

தற்போது ஒவ்வொரு வாக்காளருக்கும் ரூ.1,000 கொடுக்க சொல்லி தம்பிதுரை கூறியிருப்பதாக தகவல் அடிபடுகிறது. எனவே அவர்கள் ரூ.1,000-க்கு குறைவாக கொடுத்தால் வாங்காதீர்கள். தம்பிதுரைக்கு சொந்தமாக பல்வேறு கல்லூரிகள் உள்ளன. இதில் ஏதேனும் ஒரு மாணவ-மாணவிக்காவது இலவச கல்வி கொடுத்திருக்கிறாரா? என்பது சந்தேகம் தான். கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை கேட்டால் கூட ரூ.5 ஆயிரம் தான் கொடுப்பார். அதுவும் அங்கு வந்து தருகிறேன் என்பார்.

ஆனால் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பாரிவேந்தர், தனது தொகுதியில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.48 கோடி கல்வித்தொகையை தள்ளுபடி செய்துள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த சம்பவம் கரூரில் அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு தம்பிதுரை தரப்பு தான் பதில் சொல்ல வேண்டும் அரசியல் கட்சியினர் தெரிவித்தனர். விழாவில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Next Story