கரூரில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; உதவி பேராசிரியர் கைது


கரூரில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; உதவி பேராசிரியர் கைது
x
தினத்தந்தி 26 March 2019 11:00 PM GMT (Updated: 26 March 2019 7:56 PM GMT)

கரூர் அரசு கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்,

கரூர் தாந்தோன்றிமலையில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு கரூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த கல்லூரியின் மாணவிகள் சிலர், தங்களுக்கு பொருளாதார துறை தலைவரும், உதவி பேராசிரியருமான இளங்கோவன்(வயது 53) அடிக்கடி பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், அவர் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். அன்று முதல் அவர் கல்லூரி பணிக்கு வராததால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாணவிகள்நினைத்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை அவர் மீண்டும் பணிக்கு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் சிலர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். பின்னர் இது பற்றி கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ரவிச்சந்திரனிடம், அவர்கள் முறையிட்டனர். அப்போது, இந்த சம்பவம் குறித்து தமிழ்த்துறை தலைவர் மாரியம்மாள் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி, அளித்த அறிக்கையை மாநில கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். விரைவில் அவர் மீது நடவடிக்கை பாயும், என்று கல்லூரி முதல்வர் கூறினார்.

இதையடுத்து கல்லூரியை விட்டு வெளியே வந்த மாணவ, மாணவிகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், பாலியல் தொல்லை சம்பவம் குறித்து மனு கொடுப்பதற்காக, தாந்தோன்றிமலை மெயின்ரோடு பகுதி வழியாக ஊர்வலமாக வந்தனர். இதையறிந்து அங்கு வந்த, கரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்பட போலீசார் மாணவ, மாணவிகளை தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் போலீசார், தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், அனுமதியின்றி ஊர்வலம் செல்வது சட்டப்படி குற்றம். எனவே உங்கள் புகாரை மனுவாக கொடுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கிறோம், என்றனர்.

இதைத்தொடர்ந்து, கல்லூரியின் பொருளாதார துறை தலைவர் இளங்கோவன் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்து புகார் கொடுத்தனர். அதனை பெற்றுக்கொண்ட போலீசார், மாணவர்களை தாந்தோன்றிமலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கை கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர்.

இதற்கிடையே கல்லூரியில் இருந்த உதவி பேராசிரியர் இளங்கோவனை, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர் அவர் மீது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து அவரை, கரூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 கோர்ட்டு நீதிபதி மோகனவள்ளி முன்பு ஆஜர்படுத்தி, கரூர் கிளை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story