கீழப்பழுவூர் புதிய பஸ் நிலையத்தில் தி.மு.க.வினர் தர்ணா


கீழப்பழுவூர் புதிய பஸ் நிலையத்தில் தி.மு.க.வினர் தர்ணா
x
தினத்தந்தி 28 March 2019 10:00 PM GMT (Updated: 28 March 2019 8:43 PM GMT)

கீழப்பழுவூர் புதிய பஸ் நிலையத்தில் தி.மு.க.வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கீழப்பழுவூர்,

நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் (தனி) தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் சந்திரசேகர் போட்டியிடுகிறார். அவர் திருமானூர் ஒன்றிய பகுதிகளில் வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் கீழப்பழுவூர் கிராமத்தில் வாக்கு கேட்டு கொண்டிருக்கும் போது அங்கு கீழப்பழுவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகள் தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு துணிகள் மூலம் மூடப்பட்டிருந்தது. அப்போது அங்கு வாக்கு கேட்க வந்த அ.தி.மு.க.வினர் சிலைகள் மீது போடப்பட்டிருந்த துணிகளை அவிழ்த்து சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின் மீண்டும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு அச்சிலைகளை துணிகள் மூலம் மூடாமல் புறப்பட்டு சென்றுவிட்டனர். இதில் ஆத்திரமடைந்த தி.மு.க.வினர் தேர்தல் விதிமுறைகளை மீறி அ.தி.மு.க.வினர் செயல்படுகின்றனர். அதற்கு அதிகாரிகளும், துணை நிற்கின்றனர் என கூறி கீழப்பழுவூர் புதிய பஸ் நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் அலுவலர்கள் சிலைகளை துணி மூலம் மூடினர். பின் தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் தேர்தல் நடைமுறைகளை மீறி செயல்பட்டு வரும் அ.தி.மு.க.வினர் மீது தேர்தல் நடத்தும் மாவட்ட தேர்தல் அதிகாரியான விஜயலட்சுமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து விட்டு கலைந்து சென்றனர். 

Next Story