சமூக விரோதிகளின் தாக்குதலை கண்டித்து தஞ்சையில் சி.ஐ.டி.யூ. டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சமூக விரோதிகளின் தாக்குதலை கண்டித்து தஞ்சையில் சி.ஐ.டி.யூ. டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 March 2019 11:00 PM GMT (Updated: 30 March 2019 4:42 PM GMT)

சமூக விரோதிகளின் தாக்குதலை கண்டித்து தஞ்சையில் சி.ஐ.டி.யூ. டாஸ்மாக் ஊழியர்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட சி.ஐ.டி.யூ. டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை ஆபிரகாம்பண்டிதர் சாலையில் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் வீரையன், பொருளாளர் மதியழகன், மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால், மாவட்ட தலைவர் கோவிந்தராஜூ ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.


ஆர்ப்பாட்டத்தில் தொண்டராம்பட்டு டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் ரமேஷ், கலையரசன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை உடனே கைது செய்ய வேண்டும். உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விற்பனையாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மருத்துவ உதவித்தொகை வழங்க வேண்டும்.

டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடத்தப்படும் தொடர் கொலை வெறித்தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும். ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். விற்பனை நேரத்தை இரவு 10 மணி என்பதை இரவு 8 மணியாக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், முறைசாரா மாவட்ட செயலாளர் பேர்நீதிஆழ்வார், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் அன்பு, தரைக்கடை சங்க மாவட்ட செயலாளர் மில்லர்பிரபு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story