கோவை அருகே, 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபர் கைது


கோவை அருகே, 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 1 April 2019 12:00 AM GMT (Updated: 31 March 2019 9:38 PM GMT)

கோவை அருகே 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் ஏற்கனவே சிறுமியை 2 முறை சில்மிஷம் செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

கோவை,

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 25-ந் தேதி மாலையில் வீட்டின் முன்பு விளையாடிய சிறுமி மாயமானாள். எங்கு தேடியும் கிடைக்காத சிறுமி மறுநாள் காலையில் வீட்டின் எதிர்புறம் உள்ள சந்தில் உடலில் டி-சர்ட்டினால் சுற்றப்பட்டு பிணமாக கிடந்தாள்.

இதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று உடலை வீசிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் 100-க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 34) உள்பட 7 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் முதலில் சந்தேக்கித்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆனால் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.இந்த நிலையில் சந்தோஷ் குமார் கூறிய சில தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருந்தன. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சந்தோஷ்குமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். உடனே போலீசார் அவரை கைது செய்தனர். கைதான சந்தோஷ்குமார் வீட்டு உள் அலங்கார வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஆனால் அவரது நடவடிக்கை பிடிக்காமல் திருமணமான ஒரு மாதத்திலேயே மனைவி பிரிந்து சென்று விட்டார்.

கைதான சந்தோஷ்குமார் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறிஇருப்பதாவது:-

எனது மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். பின்னர் துடியலூர் அருகே உள்ள தாத்தா-பாட்டி வீட்டுக்கு நான் சென்று அவர்களுடன் தங்கினேன். கடந்த ஆண்டு தாத்தா இறந்துவிட்டார். அதன் பின்னர் தனியாக வசித்த பாட்டிக்கு துணையாக இருந்து வந்தேன்.

பாட்டி வீட்டின் அருகில் தான் அந்த சிறுமியை பார்த்தேன். சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து நெருங்கி பழகினேன். 6 மாதங்களுக்கு முன்பு சிறுமியை முதன்முறையாக பாலியல் பலாத்காரம் செய்தேன். அதை அவள் வெளியே யாரிடமும் கூறவில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி மீண்டும் சிறுமியை அழைத்து சில்மிஷம் செய்தேன். இருமுறை நான் நடந்து கொண்டது பற்றி சிறுமி யாரிடமும் சொல்ல வில்லை.

சம்பவத்தன்று விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை வீட்டுக்குள் வரும்படி அழைத்தேன். ஆனால் சிறுமி வரமறுத்து ஓடிச்சென்றாள். நான் விரட்டிச்சென்று பிடிக்க முயன்றபோது கீழே விழுந்து காயமடைந்தார். உடனே சிறுமியை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றேன். இதை யாரும் பார்க்கவில்லை.

அங்கு எனது பாட்டி இறக்கும் தருவாயில் படுத்த படுக்கையாக இருந்தார். எனவே சிறுமியை நான் மற்றொரு அறைக்கு தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தேன். அப்போது வலி தாங்காமல் சத்தம் போட்டாள். இதனால் நான் மாட்டிக்கொள்வேன் என பயந்து சிறுமியின் தலையில் அடித்தேன். இதில் அவள் மயங்கினாள். பின்னர் நான் சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.

இதற்கிடையே எனது பாட்டி இறந்து விட்டார். இதுபற்றி உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தேன். வீட்டுக்கு அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் வந்தனர். இரவில் இறுதி சடங்கு முடிந்ததும் வீட்டுக்குள் மறைத்து வைத்து இருந்த சிறுமியின் உடலை வெளியே தூக்கி வந்து வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டேன். அதை யாரும் பார்க்கவில்லை. ஆனால் போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

Next Story