பெரியகுளம் அருகே, சிறை சூப்பிரண்டு வீட்டில் 16 பவுன் நகை திருட்டு


பெரியகுளம் அருகே, சிறை சூப்பிரண்டு வீட்டில் 16 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 1 April 2019 10:15 PM GMT (Updated: 1 April 2019 7:28 PM GMT)

பெரியகுளம் அருகே சிறை சூப்பிரண்டு வீட்டில் பூட்டை உடைத்து 16 பவுன் நகையை யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியகுளம்,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டியை சேர்ந்தவர் முருகன்(வயது 53). இவர் பெரியகுளம் சிறையில் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது மாமனார் இறந்து விட்டார். இதற்காக முருகன் குடும்பத்துடன் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஏத்தக்கோவிலுக்கு சென்றார்.

பின்னர் அங்கிருந்து நேற்று காலை வீட்டிற்கு குடும்பத்துடன் வந்தார். அப்போது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அதில் இருந்த 16 பவுன் நகை திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து முருகன் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையொட்டி தென்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.சிறை சூப்பிரண்டு வீட்டிலேயே திருடர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story