தேர்தல் விதிகளை மீறி சுவர் விளம்பரம்: தி.மு.க.-அ.தி.மு.க.வினர் மீது வழக்கு


தேர்தல் விதிகளை மீறி சுவர் விளம்பரம்: தி.மு.க.-அ.தி.மு.க.வினர் மீது வழக்கு
x
தினத்தந்தி 3 April 2019 10:15 PM GMT (Updated: 3 April 2019 7:51 PM GMT)

தஞ்சையில் தேர்தல் விதிகளை மீறி சுவர் விளம்பரம் செய்ததாக தி.மு.க.- அ.தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை நாடாளுமன்ற மற்றும் தஞ்சை சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் விதிமுறைகளை மீறி செயல் படும் கட்சிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் அனுமதியின்றி பேனர்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் செய்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படு கிறது.

அதன்படி தஞ்சை கலைஞர் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது அனுமதியின்றி அ.தி.மு.க. சின்னமான இரட்டை இலை வரைந்ததாக அ.தி.மு.க. மீதும், இதே போல் தி.மு.க. சின்னமான உதயசூரியன் சின்னம் வரைந்ததற்காக தி.மு.க. மீதும் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

4 வழக்குகள் பதிவு

இதே போல் ரகுமான் நகரில் உள்ள ஒரு மகளிர் விடுதியின் சுவற்றில் அனுமதியின்றி சுவர் விளம்பரம் செய்ததாக அ.தி.மு.க. மீதும், அதே பகுதியில் சின்னம் வரைந்ததாக தி.மு.க. மீதும் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த பகுதியில் அ.தி.மு.க., தி.மு.க. மீது மொத்தம் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story