கோடை கால குடிநீர் தேவையை சமாளிக்க கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு


கோடை கால குடிநீர் தேவையை சமாளிக்க கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 4 April 2019 11:00 PM GMT (Updated: 4 April 2019 7:00 PM GMT)

கோடை கால குடிநீர் தேவையை சமாளிக்க கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.

திருக்காட்டுப்பள்ளி,

காவிரி பாசன பகுதி விவசாயத்திற்காக கடந்த ஆண்டு(2018)ஜூலை 18-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. வழக்கம்போல் கடந்த ஜனவரி 28-ந் தேதி மேட்டூர் அணை மூடப்பட்டது. மேட்டூர் அணை மூடப்பட்ட நிலையில் கடந்த 4 மாதங்களாக மழை இல்லாததால் கடுமையான வறட்சி நிலவுகிறது. ஆங்காங்கே நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் பற்றாக்குறையும் இருந்து வருகிறது. இதனையடுத்து குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் மார்ச் 31-ந் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அறிவித்து இருந்தது. அதன்படி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று காலை 6 மணி அளவில் கல்லணைக்கு வந்து சேர்ந்தது.

கல்லணைக்கு வந்து சேர்ந்த தண்ணீர் கொள்ளிடத்தில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் திறந்து விடப்படுகிறது. கல்லணையில் தண்ணீர் வந்து சேர்ந்து கொள்ளிடத்தில் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேறிச்செல்வதை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர்கள் பக்தவச்சலம் மற்றும் செல்வராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கல்லணை உதவி பொறியாளர் ஆண்டு, தலைமைப்பொறியாளர்களிடம் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறித்து விளக்கி கூறினார்.

கல்லணையில் இருந்து காவிரி வெண்ணாறு மற்றும் கல்லணைக்கால்வாய்களில் தண்ணீர் விடாமல் கொள்ளிடத்தில் மட்டும் தண்ணீர் திறந்து விடுவது குறித்து விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். கல்லணையில் இருந்து சிறிதளவாவது கிளை ஆறுகளான காவிரி, வெண்ணாறு மற்றும் கல்லணை கால்வாய்களில் திறந்தால் நல்லது என்று விவசாயிகள் தெரிவித்தனர். 

Next Story