சிறு, குறு வணிகர்களுக்கு தனி அமைச்சகம் வேண்டும் வணிகர்கள் சம்மேளன நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம்


சிறு, குறு வணிகர்களுக்கு தனி அமைச்சகம் வேண்டும் வணிகர்கள் சம்மேளன நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 4 April 2019 11:31 PM GMT (Updated: 4 April 2019 11:31 PM GMT)

நேற்று நடந்த கூட்டத்திற்கு அகில இந்திய வணிகர்கள் சம்மேளன நாக்பூர் தலைவர் பார்த்தியா தலைமை தாங்கினார்.

புதுச்சேரி,

அகில இந்திய வணிகர்கள் சம்மேளனத்தின் தேசிய நிர்வாகக்குழு கூட்டம் புதுச்சேரி சர்தார் வல்லபாய் படேல் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் 2 நாட்கள் நடைபெற்றது. நேற்று நடந்த கூட்டத்திற்கு அகில இந்திய வணிகர்கள் சம்மேளன நாக்பூர் தலைவர் பார்த்தியா தலைமை தாங்கினார்.

அகில இந்திய வணிகர்கள் சம்மேளனத்தின் அகமதாபாத் சேர்மன் மகேந்திரஷா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டார். அகில இந்திய வணிகர்கள் சம்மேளனத்தின் தேசிய பொதுச்செயலாளர் பிரவின் கன்டேல்வால் நோக்கவுரையாற்றினார். புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு தலைவரும், அகில இந்திய வணிகர்கள் சம்மேளனத்தின் துணைத்தலைவருமான சிவசங்கர் உள்பட 27 மாநிலங்களை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை தடுக்க வேண்டும், சிறு மற்றும் குறு வணிகர்களின் பிரச்சினைகளை கவனிக்க தனி அமைச்சகம் வேண்டும், சில்லரை வணிகத்திற்கு என தேசிய வணிகக்கொள்கை வேண்டும், மூத்த வணிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், இந்திய சூழ்நிலைக்கு ஏற்ற தனி உணவு பாதுகாப்பு சட்டம், சிறு மற்றும் குறு வணிகர்களுக்கு 2 சதவீத வட்டியில் கடனுதவி, ஜி.எஸ்.டி. பதிவு செய்த வணிகர்களுக்கு 10 லட்சம் மதிப்பீட்டில் காப்பீடு உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேற்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதாக கூறும் கட்சிக்கே வணிகர்கள் வாக்களிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Next Story