10 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மாற்றுத்திறனாளி பெற்றோரிடம் ஒப்படைப்பு கன்னியாகுமரியில் நெகிழ்ச்சி சம்பவம்


10 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மாற்றுத்திறனாளி பெற்றோரிடம் ஒப்படைப்பு கன்னியாகுமரியில் நெகிழ்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 6 April 2019 4:15 AM IST (Updated: 6 April 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

10 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மாற்றுத்திறனாளி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் நடந்த இந்த நெகிழ்ச்சி சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அசோக்குமார் பாண்டா (வயது 45). மாற்றுத்திறனாளியான இவர், குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போது மாயமானார். பின்னர் கன்னியாகுமரியில் தனியாக சுற்றித்திரிந்த அவரை கொட்டாரம் பகுதியில் உள்ள மனோலயா காப்பகத்தினர் மீட்டு பராமரித்து வந்தனர். அசோக்குமார் பாண்டா சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர்.

இந்த நிலையில் மாநில குற்ற ஆவண காப்பக ஏ.டி.ஜி.பி. சீமா முயற்சியால் தமிழகத்தில் உள்ள அனைத்து பதிவு செய்யப்பட்ட மனநல காப்பகங்களிலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தகீரா மூலமாக மன நோயாளிகள் கணக்கிடப்பட்டு அவர்களின் பெற்றோர்களுடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காப்பகத்தில் தங்கி வந்த அசோக்குமார் பாண்டா கொடுத்த தகவலின் மூலம் போலீசார் அவருடைய பெற்றோர் யார்? என விசாரித்தனர். போலீசாரின் முயற்சிக்கு பலன் கிடைத்தது. அசோக் குமார் பாண்டாவின் பெற்றோரை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களை கன்னியாகுமரிக்கு வரவழைத்தனர். காப்பகத்தில் அசோக்குமார் பாண்டாவை பார்த்ததும் அவரது பெற்றோர் கட்டி தழுவியும், முத்தமிட்டும் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். உறவினர்களும் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

இதையொட்டி மனோலயா காப்பக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் மகிளா கோர்ட்டு நீதிபதி ஜான் ஆர்.டி. சந்தோசம் தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் தகீரா ஆகியோர் முன்னிலையில் அசோக்குமார் பாண்டா அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். 10 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மகன் கிடைத்த சந்தோஷத்தில் பெற்றோர் மகிழ்ச்சியுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதே போல் சமீபத்தில், மனோலயா காப்பகத்தில் தங்கியிருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரும் அவருடைய பெற்றோருடன் சேர்த்து வைக்கப்பட்டார். இவர் 9 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1 More update

Next Story