வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறையில் மீன்பிடி சீசன் தொடங்கியது


வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறையில் மீன்பிடி சீசன் தொடங்கியது
x
தினத்தந்தி 6 April 2019 11:00 PM GMT (Updated: 6 April 2019 7:18 PM GMT)

வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறையில் மீன்பிடி சீசன் தொடங்கி உள்ளது.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை, புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, கோடியக்காடு, வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி, விழுந்தமாவடி உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள மீனவர்கள் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருகிறார்கள். வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலம் ஆகும்.

இந்த காலத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுச்சேரி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோடியக்கரைக்கு வந்து மீன்பிடித்து செல்கிறார்கள். கோடியக்கரையில் மீன்பிடி சீசன் முடிவடைந்து விட்டதால் வெளி மாவட்ட மீனவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.

பாக்ஜலசந்தி கடற்பகுதியில் அமைந்துள்ள கோடியக்கரையில் சீசன் முடிவடைந்தவுடன் 10 கி.மீ தூரம் உள்ள வங்காளவிரிகுடா கடற்பகுதியில் உள்ள ஆறுகாட்டுதுறையில் மீன்பிடி சீசன் தொடங்குவது வழக்கம். இதன்படி தற்போது ஆறுகாட்டுத்துறையில் மீன்பிடி சீசன் தொடங்கி உள்ளது. இதனால் கோடியக்கரைக்கு சென்ற மல்லிப்பட்டினம் ஜெகதாப்பட்டினம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்களின் பைபர் மற்றும் விசைப்படகுகள் அனைத்தும் தற்போது மீண்டும் ஆறுகாட்டுத்துறைக்கு வந்து சேர்ந்து உள்ளது.

ஆறுகாட்டுத்துறை கடற்பகுதிக்கு 300-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் வந்துள்ளதால் இப்பகுதியில் மீன்பிடி தொழில் மும்முரம் அடைந்துள்ளது.

ஆறுகாட்டுத்துறையிலிருந்து தினமும் காலையும் மாலையும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகிறார்கள். கரை திரும்பும் மீனவர்கள் வலையில் காலா, சீலா, வாவல் போன்ற மீன்களும் இறால், நண்டு போன்றவைகளும் அதிக அளவு சிக்குகிறது. தற்போது வெளியூர்களில் இருந்து வரும் படகுகளில் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் கடந்த 6 மாதங்களாக மிகவும் வெறிச்சோடி காணப்பட்ட ஆறுகாட்டுத்துறை கடற்கரை மீண்டும் பரபரப்பாக காணப்படுகிறது. இதைப்போல வங்காளவிரிகுடா கடற்பகுதியில் அமைந்துள்ள புஷ்பவனம் பெரியகுத்தகை வெள்ளப்பள்ளம் வானவன்மகாதேவி கடற்கரை பகுதியிலும் மீன்பிடி தொழில் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.

Next Story