முத்துமாரியம்மன் கோவில் திருவிழா பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்


முத்துமாரியம்மன் கோவில் திருவிழா பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
x
தினத்தந்தி 7 April 2019 10:30 PM GMT (Updated: 7 April 2019 8:24 PM GMT)

நார்த்தாமலை முத்து மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இன்று தேரோட்டம் நடக்கிறது.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டத் தில் உள்ள நார்த்தாமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மார்ச் 31-ந் தேதி கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, அம்மன் வீதிஉலா நடைபெற்று வருகிறது. தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கீரனூர், நார்த்தாமலை, அன்னவாசல் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் விரதம் இருந்து வந்தனர். இந்நிலையில் நேற்று விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி னர். மேலும் கரும்பில் தொட் டில் கட்டி அதில் குழந்தையை வைத்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தும் பொங்கல் வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) நடை பெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவி னரும், ஊர் பொதுமக்களும் செய்து வருகின்றனர். மேலும் புதுக்கோட்டை, கீரனூர், அன்னவாசல் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரனூர் போலீசார் செய்து வருகின்றனர்.

வைத்தூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா பூச்சொரிதல் மற்றும் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெறுவது வழக்கம். வழக்கம்போல் இந்த ஆண்டும் கடந்த 24-ந் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த 31-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் பங்குனி திருவிழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடைபெற்று வருகிறது.

8-வது நாள் திருவிழாவான நேற்று வைத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பறவை காவடி எடுத்தும், அலகுகுத்தியும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

Next Story