மு.க.ஸ்டாலின் சுதந்திரமாக நடமாட அ.தி.மு.க. அரசு தான் காரணம் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு


மு.க.ஸ்டாலின் சுதந்திரமாக நடமாட அ.தி.மு.க. அரசு தான் காரணம் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
x
தினத்தந்தி 7 April 2019 11:30 PM GMT (Updated: 7 April 2019 10:13 PM GMT)

தி.மு.க. ஆட்சி நடந்தபோது மதுரையில் நுழைய முடியாத மு.க.ஸ்டாலின், தற்போது சுதந்திரமாக நடமாடுகிறார் என்றால் அதற்கு அ.தி.மு.க. அரசு தான் காரணம் என்று எடப்பாடி பழனிசாமி பேசினர்.

கரூர்,

எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன் மதுரையில் நாடாளுமன்றத் தொகுதியில் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். 2006-ம் ஆண்டு அவர் துணை முதல்- அமைச்சராக இருந்தபோது இதுபோன்று சுதந்திரமாக அவரால் நடைப்பயணம் மேற்கொள்ள முடிந்ததா? அவரால் மதுரைக்குள் நுழைய முடிந்ததா? இப்பொழுது நடைபெறும் ஆட்சி ஜெயலலிதா வழியில் செயல்படும் ஆட்சி. இது சட்டத்தின் ஆட்சி. அதனால்தான் அவரால் மதுரையில் இப்பொழுது சுதந்திரமாக நடைப்பயணம் செல்லமுடிகிறது. இதுவே, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது என்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதும்.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் இந்த அரசு நிறைவேற்றியுள்ளது. ஆனால் தி.மு.க. பொய்யான தேர்தல் வாக்குறுதியை அளித்து, நாங்கள் இதை செய்து தருவோம், அதை செய்து தருவோம் என மக்களை குழப்பி கொல்லைப்புறத்தின் வழியாக வெற்றி பெற்றுவிடலாம் என நினைக் கிறார்கள். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. ஏனென்றால், இதுவரை தேர்தல் நேரத்தில் அறிவித்த எந்த வாக்குறுதியும் தி.மு.க. நிறைவேற்றியதில்லை. தி.மு.க.வை பொறுத்தவரை நாட்டு நலனுக்காக எந்த திட்டத்தையும் செயல்படுத்தியது இல்லை. தங்கள் குடும்ப உறுப்பினர்கள் வளம்பெறுவதற்கான வழிவகையை ஏற்படுத்திக்கொண்டார்கள்.

37 அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதின் காரணமாகவே மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர்முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க உத்தரவிட்டது. 50 ஆண்டு காலமாக நிலவி வந்த காவிரி நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கண்ட அரசு, இந்த அரசு. காவிரி நதி நீர் பிரச்சினையைப் பற்றி பேச தி.மு.க.விற்கு எந்த தகுதியும் கிடையாது. வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக தரும் ஒரே மாநிலம் தமிழகம் தான்.

ப.சிதம்பரம் தனது பதவிக்காலத்தில் தமிழ்நாட்டின் நலனுக்காக எந்த ஒரு நிதியினையும் ஒதுக்கவில்லை. ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை. தமிழ்நாடு அரசு கோரிய நிதியினைக் கூட ஒதுக்கவில்லை. அவர் நிதி மந்திரியாக இருந்த காலத்தில் தமிழ்நாட்டிற்குத் தேவையான நிதிகளை பெற்றுத் தந்திருந்தால் விவசாயிகள் நலன் காக்க பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்திருக்கலாம். ஆனால் அதை செய்யவில்லை. இவரைப் போன்று காங்கிரஸ் கட்சியினர் வெற்றிப் பெற்ற பிறகு தமிழக மக்களை மறந்துவிடுவார்கள். தேர்தல் வரும்போதுதான் காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வுக்கு தமிழக மக்கள் குறித்த ஞாபகம் வருகிறது.

எனவே இவர்கள் வெற்றிப் பெற்றால் தொகுதிக்கு எந்த நன்மையும் செய்யப்போவதில்லை. எனவே நீங்கள் சிந்தித்து வெற்றிக் கூட்டணியான எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு மணிமாறன், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பொள்ளாச்சி மகேந்திரன் ஆகியோருக்கு வாக்கு சேகரிப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திருப்பூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். தாராபுரம் புதுக்காவல் நிலைய வீதி, மடத்துக்குளம் நால்ரோடு, உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு ஆகிய இடங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேனில் நின்றபடி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நமது மெகா கூட்டணியை பார்த்து மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்து விட்டது. பயத்தில் ஏதேதோ உளறுகிறார். மரியாதைக்குறைவாக பேசுகிறார். மரியாதை கொடுத்து பேசினால் மரியாதை கிடைக்கும். நாங்கள் கிராமத்தில் வாழ்ந்தவர்கள். மு.க.ஸ்டாலின் தந்தை கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்ததால் அவர் கட்சிக்கு வந்தார். துணை முதல்-அமைச்சர் ஆனார். ஆனால் நான் கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்து படிப்படியாக முன்னேறி எம்.எல்.ஏ.வாக போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகி இந்த நிலையை எட்டியுள்ளேன். ஆனால் மு.க.ஸ்டாலின் கொல்லைப்புறம் வழியாக முதல்-அமைச்சராக துடிக்கிறார்.

நாடு பாதுகாப்பாக இருந்தால்தான் மக்கள் வளமோடு, செழிப்போடு, நலமுடன் வாழ முடியும். வலிமையான பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும். அண்மையில் துணை ராணுவ வீரர்கள் பலியான சோக சம்பவம் நடந்து விட்டது. இந்தநிலை உருவாகி விடக்கூடாது என்பதற்காக இந்தியாவை ஆளும் தகுதியான பிரதமராக நரேந்திர மோடி வர வேண்டும்.

மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வரும்போது தமிழகத்துக்கு தேவையான நிதிகள் கிடைக்கும். வளர்ச்சி திட்டங்கள் நமக்கு கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மடத்துக்குளம் நால்ரோட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்தபோது அந்த வழியாக சைரன் ஒலிக்க ஆம்புலன்சு வந்தது. இதைப்பார்த்ததும் பேச்சை நிறுத்திய முதல்-அமைச்சர், ஆம்புலன்சுக்கு வழிவிட்டு நிற்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார். ஆம்புலன்சு டிரைவரிடம் எந்த பக்கம் போக வேண்டும் என்று கேட்டு, வேனில் இருந்தபடியே கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். தம்பி வழிவிடுங்க... அம்மா வழிவிடுங்க..., டிரைவர் பார்த்து போ... என்று கூறி ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்திக்கொடுத்தார். ஆம்புலன்சு சென்ற பிறகு அவர் தனது பேச்சை தொடர்ந்தார்.

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சி.மகேந்திரனுக்கு ஆதரவாக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் நடந்தது. இதில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு வேட்பாளர் சி.மகேந்திரனுக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.

அப்போது பேசும்போது, ‘தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான் செல்லும் இடங்களில் எல்லாம் பொள்ளாச்சி சம்பவத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார். அந்த சம்பவம் வேதனை அளிக்கக்கூடியது, துரதிர்ஷ்டவசமாக நடந்தது. இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து குற்றவாளிகள் கூண்டில் நிறுத்தி நீதிமன்றம் மூலம் கடும் தண்டனை வாங்கிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Next Story