வருகிற 12–ந் தேதி தமிழகத்தில் 4 இடங்களில் ராகுல்காந்தி பிரசாரம் கே.எஸ்.அழகிரி தகவல்


வருகிற 12–ந் தேதி தமிழகத்தில் 4 இடங்களில் ராகுல்காந்தி பிரசாரம் கே.எஸ்.அழகிரி தகவல்
x
தினத்தந்தி 8 April 2019 11:15 PM GMT (Updated: 8 April 2019 4:53 PM GMT)

வருகிற 12–ந் தேதி தமிழகத்தில் 4 இடங்களில் ராகுல்காந்தி பிரசாரம் செய்கிறார் என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.

நாகர்கோவில்,

தமிழகத்தில் மதசார்பற்ற கூட்டணியின் வெற்றி வாய்ப்பு நாளுக்கு நாள் பிரகாசமாகி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்து இருக்கிறது. பிரதமர் நரேந்திரமோடி கையில் நாடு பத்திரமாக இருக்கும் என்று அமித்ஷா சொல்கிறார். ஆனால் ராணுவ கோப்புகளை கூட அவரால் பத்திரமாக வைக்க முடியவில்லை.

நாகர்கோவில் நேசமணிநகர் போலீசார் கூப்பன் பிடித்திருக்கிறார்கள். ஆனால் பிடிபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. எனவே இதுதொடர்பாக முழு விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்வதோடு கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்.

காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் அடிப்படையாக ஒரு வேறுபாடு உண்டு. அதாவது மத்தியில் மாநிலங்களுடனான கூட்டணி ஆட்சி நடக்க வேண்டும் என்று நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். ஆனால் பா.ஜனதா ஒற்றை அதிகாரம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. ஒரே முறையான கல்விமுறையை கொண்டுவந்து நாடு முழுவதும் ஒரே தேர்வு கொண்டு வரவேண்டும். எனவே தான் நீட் தேர்வை மாநிலங்களே முடிவு செய்யலாம் என காங்கிரஸ் கூறியுள்ளது.

பண வினியோகத்தை தடுத்து நிறுத்துங்கள் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கிறோம். இந்திய தேர்தல் ஆணையம் நம்பக தன்மையை இழந்துள்ளது. ராகுல்காந்தி வருகிற 12–ந்தேதி தமிழகத்தில் 4 இடங்களில் பிரசாரம் செய்கிறார். எந்த இடங்கள் என்று முடிவாகவில்லை.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை என்னவென்று அவர்களுக்கே தெரியாது. யாரோ அச்சடித்து கொடுத்ததை வெளியிட்டு இருக்கிறார்கள். மோடி கைக்குள் எடப்பாடி பழனிசாமி பாதுகாப்பாக இருக்கிறார். அரசு ஊழியர்கள் மீது அ.தி.மு.க.வுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் தபால் ஓட்டுக்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளனர். தேர்தலுக்கு பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தமிழக தேர்தல் பொறுப்பாளர் சஞ்சய் தத், எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story