நாகை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 8 பேர் கைது 11 மாட்டுவண்டிகள்- டிராக்டர் பறிமுதல்


நாகை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 8 பேர் கைது 11 மாட்டுவண்டிகள்- டிராக்டர் பறிமுதல்
x
தினத்தந்தி 8 April 2019 10:45 PM GMT (Updated: 8 April 2019 7:30 PM GMT)

நாகை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 11 மாட்டு வண்டிகள்-டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டு மணல் கடத்தலை தடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கீழ்வேளூர் போலீஸ் சரகம் தீத்தாம்பேட்டை மற்றும் கடம்பரவாழ்க்கை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை கீழ்வேளூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த 11 மாட்டு வண்டிகள் மற்றும் 1 டிராக்டர் ஆகியவற்றை மறித்து சோதனை செய்தனர். அதில் மணல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் கோகூர் மெயின் சாலையை சேர்ந்த சித்திரவேல் (வயது 45), ரமேஷ் (35), தெற்கு தெருவை சேர்ந்த குமார் (36), புதுத்தெருவை சேர்ந்த சவுந்தரம் (52), வீரையன் (40), வடக்கு தெருவை சேர்ந்த ரவிக்குமார் (31) மற்றும் டிராக்டர் டிரைவர் சிராங்குடி நடுத்தெருவை சேர்ந்த வேல்முருகன் (35), உரிமையாளர் ஆழியூர் புதுத்தெருவை சேர்ந்த முகமது ஜமால் ஆகியோர் என்பதும், இவர்கள் கோகூரில் உள்ள வெட்டாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 11 மாட்டு வண்டிகள், டிராக்டரையும் பறிமுதல் செய்தனர். இதில் தப்பியோடிய கோகூர் வடக்கு தெருவை சேர்ந்த தங்கவேல் மகன் பக்கிரிசாமி, நடராஜன் மகன் சுந்தரமூர்த்தி ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story