சென்னை விமான நிலையத்தில் ரூ.27½ லட்சம் தங்கம் பறிமுதல் ரூ.20 லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது


சென்னை விமான நிலையத்தில் ரூ.27½ லட்சம் தங்கம் பறிமுதல் ரூ.20 லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது
x
தினத்தந்தி 8 April 2019 9:45 PM GMT (Updated: 8 April 2019 8:31 PM GMT)

கொழும்பு, துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.27½ லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.20 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணமும் சிக்கியது.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த ஹசேன்அலி (வயது 29), சுபையர் அலி (32) ஆகியோர் இலங்கைக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பினர். சந்தேகத்தின் பேரில் 2 பேரையும் நிறுத்தி விசாரித்தனர். இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் எதுவும் இல்லை. பின்னர் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததில் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

அதேபோல் துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த ரகமத்துல்லா (41) என்பவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் இருந்த ரூ.28 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட்டுகளை கைப்பற்றினார்கள். பின்னர் தனியறைக்கு அழைத்து சென்று சோதித்தனர். உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

பிடிபட்ட 3 பேரிடம் இருந்தும் மொத்தம் ரூ.27½ லட்சம் மதிப்புள்ள 730 கிராம் தங்கத்தையும், ரூ.28 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட்டுகளையும் பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு விமானம் செல்ல இருந்தது. இதில் பயணம் செய்ய வந்தவர்களை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

திருச்சியை சேர்ந்த அஜ்மத்கான் (30), முகமது தவுபீக் (30), அபூபக்கர் (30) ஆகியோரின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது 3 பேரும் வெளிநாட்டு பணத்தை மறைத்து வைத்து இருந்தனர். 3 பேரிடம் இருந்தும் ரூ.20 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story