தலமலை, கடம்பூர் பகுதிகளில் திடீர் கோடை மழை


தலமலை, கடம்பூர் பகுதிகளில் திடீர் கோடை மழை
x
தினத்தந்தி 9 April 2019 10:30 PM GMT (Updated: 9 April 2019 9:16 PM GMT)

தலமலை, கடம்பூர் பகுதிகளில் திடீரென கோடை மழை பெய்தது.

தாளவாடி,

தாளவாடி அருகே உள்ள தலமலை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் சுட்டெரிக்கிறது.

வனப்பகுதியில் உள்ள மரம், செடி கொடிகள் காய்ந்துவிட்டன. வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி காட்டை விட்டு வெளியேறி அருகே உள்ள கிராமங்களுக்கு படையெடுத்து வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு 12 மணியளவில் தலமலை, சிக்கள்ளி, இக்களூர், தெட்டாபுரம், நெய்தாளபுரம் ஆகிய பகுதியில் இடியுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 20 நிமிடம் பெய்த இந்த கோடை மழையால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். இதேபோல் தாளவாடி, கும்டாபுரம், இரியாபுரம் பகுதிகளில் நேற்று மாலை 3 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்தது. சுமார் 15 நிமிடம் நிற்காமல் மழை தூறிக்கொண்டே இருந்தது.

கடம்பூரை அடுத்துள்ள கோட்டமாளம், சுஜில் கரை, திங்களூர், செலுமி தொட்டி, கோட்டை தொட்டி, காடு பசுவன்மாளம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வதைத்தது. பின்னர். இரவு 10 மணியளவில் கருமேகங்கள் திரண்டன. அதைத்தொடர்ந்து இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்தது. 45 நிமிடம் பெய்த இந்த சாரல் மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

இந்தநிலையில் நேற்று பகல் 2 மணியளவில் மீண்டும் இந்த பகுதிகளில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 30 நிமிடம் நிற்காமல் பெய்த சாரல் மழை பின்னர் ஓய்ந்தது.

Related Tags :
Next Story