குறிஞ்சிப்பாடி அருகே, மின்சாரம் தாக்கி பெண் பலி


குறிஞ்சிப்பாடி அருகே, மின்சாரம் தாக்கி பெண் பலி
x
தினத்தந்தி 9 April 2019 10:45 PM GMT (Updated: 9 April 2019 11:03 PM GMT)

குறிஞ்சிப்பாடி அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

குறிஞ்சிப்பாடி,

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கல்குணம் வடக்கு தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி சரோஜா (வயது 60). இவர்களுடைய மகள் செல்வி(35). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்த நிலையில் நேற்று காலை செல்வி தனது வீட்டின் அருகில் இருந்த கூரை கொட்டகைக்கு சென்றார். அங்கு ஒரு ஆடு கீழே விழுந்து கிடந்தது.

இதை பார்த்த செல்வி அந்த ஆட்டை தூக்கினார். அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், செல்வி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சரோஜா குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மின்கசிவு காரணமாக கூரை கொட்டகையின் சுவரில் மின்சாரம் பாய்ந்திருந்ததும், அப்போது ஆடு சுவரில் முட்டியபோது மின்சாரம் தாக்கி செத்ததும், இதை அறியாத செல்வி ஆட்டை தூக்கிய போது அவர் மீதும் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story