திருவாரூர் தியாகராஜர் கோவில் பாதுகாப்பு மையத்தில் 5,079 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது


திருவாரூர் தியாகராஜர் கோவில் பாதுகாப்பு மையத்தில் 5,079 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது
x
தினத்தந்தி 10 April 2019 11:15 PM GMT (Updated: 10 April 2019 6:47 PM GMT)

திருவாரூர் தியாகராஜர் கோவில் பாதுகாப்பு மையத்தில் 5,079 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

திருவாரூர்,

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சிலைகள் பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தொல்லியல் துறை உதவியுடன் சிலைகளின் உண்மை தன்மை நிலை குறித்து ஏற்கனவே 6 கட்டமாக ஆய்வு செய்தனர்.

இதனையடுத்து 7-ம் கட்ட ஆய்வு கடந்த 8-ந் தேதி தொடங்கியது. இதில் தொல்லியல் துறையின் தென் மண்டல இயக்குனர் நம்பிராஜன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் ஆகியோர் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சிலைகளை ஆய்வு செய்தனர். அப்போது சிலைகளின் எடை, உயரம், உலோகத்தின் தன்மை குறித்து முழு ஆய்வு நடத்தினர்.

இதற்கிடையில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 5 சிலைகள் போலி என கண்டறியப்பட்டது. இதனால் ஆய்வு தீவிரபடுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று சிலைகளின் ஆய்வு நிறைவு பெற்றது.

பாதுகாப்பு மையத்தில் இருந்த 5,079 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதன் ஆய்வு அறிக்கை நாளைக்குள்(அதாவது இன்று) உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

Next Story