பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் மேலும் ஒருவர் கைது - 3 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை


பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் மேலும் ஒருவர் கைது - 3 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 10 April 2019 11:45 PM GMT (Updated: 10 April 2019 6:56 PM GMT)

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை அம்பலபடுத்திய மாணவியின் அண்ணனை தாக்கியவருக்கு பாலியல் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்ததுடன் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை மயக்கி, ஆபாச வீடியோ எடுத்து பலாத்காரம் செய்த வழக்கில் பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்த சபரிராஜன் (வயது 25), அவருடைய நண்பர்கள் சதீஷ் (27), வசந்தகுமார் (24) ஆகியோரை கடந்த பிப்ரவரி மாதம் 25-ந் தேதி பொள்ளாச்சி போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த திருநாவுக்கரசும் கைது செய்யப்பட்டார். கைதான 4 பேரும் தற்போது கோவை மத்திய சிறையில் உள்ளனர்.

இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 19 வயது மாணவி கொடுத்த புகாரின் பேரில் இந்த கொடூர சம்பவம் அம்பலத்துக்கு வந்தது. அந்த மாணவி கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து 26-ந் தேதி புகார் கொடுத்த மாணவியின் அண்ணன் பொள்ளாச்சி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அவரை பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையத்தை சேர்ந்த செந்தில் (33), மற்றொரு வசந்தகுமார் (26), மணிவண்ணன் (25), பார் நாகராஜ் (28), பொள்ளாச்சி பாபு (26) ஆகிய 5 பேர் வழிமறித்து வழக்கை வாபஸ் பெறக்கோரி, அவரை தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மாணவியின் அண்ணன் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் செந்தில், மணிவண்ணன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதில் 4 பேர் கைதானார்கள். இந்த வழக்கில் தலைமறைவான மணிவண்ணன் கடந்த மாதம் 25-ந் தேதி கோவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணை முடிந்ததும் மேலும் கூடுதலாக 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். இதில் பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது. அத்துடன் மாணவிகள், இளம்பெண் களை பாலியல் பலாத்காரம் செய்ததில் மணிவண்ணனுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்ய முடிவு செய்தனர். இது தொடர்பான அறிக்கையை கோவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் தாக்கல் செய்து அனுமதி பெற்றனர். பின்னர் மணிவண்ணனை போலீசார், பாலியல் பலாத்கார வழக்கில் சேர்த்து, அவரை கைது செய்தனர்.

அத்துடன் மணிவண்ணனை இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 10 நாட்கள் அனுமதி கேட்டு கோவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் போலீசார் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று காலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசார் பலத்த பாதுகாப்புடன் மணிவண்ணனை கோர்ட்டுக்கு அழைத்து வந்து ஆஜர்படுத்தினார்கள்.

அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி நாகராஜன் அனுமதி அளித்தார். இதையடுத்து போலீசார் மணிவண்ணனை பாதுகாப்புடன் ரகசிய இடத்துக்கு அழைத்துச்சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீசார் கூறும்போது, ‘மாணவிகள், இளம்பெண்களை பலாத்காரம் செய்தது தொடர்பாக மணிவண்ணனுக்கு பல்வேறு விதத்தில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இன்னும் இந்த சம்பவத்தில் எத்தனை பேருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தினால்தான் தெரியவரும். இதனால் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

Next Story