குடியிருப்பு பகுதியில் குப்பைகள் மறுசுழற்சி மைய கட்டிடத்தை பொதுமக்கள் முற்றுகை - தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு


குடியிருப்பு பகுதியில் குப்பைகள் மறுசுழற்சி மைய கட்டிடத்தை பொதுமக்கள் முற்றுகை - தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு
x
தினத்தந்தி 10 April 2019 10:30 PM GMT (Updated: 10 April 2019 8:41 PM GMT)

தேனியில் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குப்பைகள் மறுசுழற்சி மைய கட்டிடத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

தேனி,

தேனி கே.ஆர்.ஆர். நகரில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி, தரைமட்ட குடிநீர் தொட்டிகள் அமைந்துள்ள பகுதிகளில் குப்பைகள் மறுசுழற்சி செய்யும் திட்டத்துக்கான கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இங்கு விரைவில் குப்பைகள் மறுசுழற்சி செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில், இப்பகுதியில் செயல்படுத்தும் இந்த திட்டத்துக்கு கே.ஆர்.ஆர்.நகர், எம்.ஜி.ஆர். நகர், என்.ஆர்.டி.நகர், சமதர்மபுரம் மற்றும் சிவாஜி நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இக்குடியிருப்பு பகுதிகளில் இத்திட்டத்தை செயல்படுத்தினால் பாதிப்பு ஏற்படும் என்றும், இதை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்திலும் கடந்த வாரம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

இருப்பினும் இந்த திட்டத்தை செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து முனைப்பு காட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இத்திட்டம் செயல்படுத்த கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இத்திட்டத்தை இப்பகுதிகளில் செயல்படுத்தக்கூடாது என்று கோஷங்கள் எழுப்பினர்.

தகவல் அறிந்ததும் தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் போலீசார் அங்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போலீசார் நகராட்சி அதிகாரிகளிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விசாரித்தனர். தேர்தல் முடியும் வரை இங்கு எந்த பணிகளும் நடக்காது என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் கூறுகையில், ‘தேர்தலுக்காக பணிகளை நிறுத்தி வைக்காமல், முற்றிலும் இங்கிருந்து இந்த திட்டத்தை அப்புறப்படுத்த வேண்டும். இல்லை என்றால், நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்போம். இந்த பகுதியில் குப்பைகள் மறுசுழற்சி திட்டம் செயல்படுத்துவது குறித்து மக்களிடம் இதுவரை நகராட்சி நிர்வாகம் தெரிவிக்கவில்லை. மக்களிடம் கருத்து கேட்கவும் இல்லை’ என்றனர்.

Next Story