பிறந்த நாளையொட்டி அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


பிறந்த நாளையொட்டி அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 14 April 2019 10:45 PM GMT (Updated: 14 April 2019 8:28 PM GMT)

பிறந்த நாளையொட்டி பெரம்பலூரில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெரம்பலூர்,

இந்திய அரசியலமைப்பினை இயற்றிய சட்ட மேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நாள் விழா நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பெரம்பலூரில் அ.தி.மு.க.வினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.சிவபதி, பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், குன்னம் எம்.எல்.ஏ.வுமான ராமச்சந்திரன், பெரம்பலூர் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் துரை.காமராஜ், பா.ம.க. மாவட்ட செயலாளர் செந்தில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சின்னசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தி.மு.க.

தி.மு.க. சார்பில் பொதுக்குழு உறுப்பினர் முகுந்தன் தலைமையில், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் சதீஸ்குமார் தலைமையிலும், காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் வக்கீல் தமிழ்ச்செல்வன் தலைமையிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் மாவட்ட செயலாளர் ஞானசேகரன் தலைமையிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பெரம்பலூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் மாநில விவசாய அணி செயலாளர் வீர.செங்கோலன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாநில செயலாளரும், மூத்த வக்கீலுமான காமராசு தலைமையில், அக்கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்க், கட்சியின் பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் முத்துலட்சுமி ஆகியோர் மாலை அணிவித்தனர்.

மலர்தூவி

மேலும் மத்திய- மாநில அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம், லோக் ஜன சக்தி, அண்ணல் அம்பேத்கர் முன்னணி மற்றும் அம்பேத்கர் இயக்கங்களை சேர்ந்த தொண்டர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் சங்குப்பேட்டையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் உருவப்படத்திற்கு பொதுமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

Next Story