ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கவிடாமல் தடுத்த தி.மு.க.விற்கு வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு


ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கவிடாமல் தடுத்த தி.மு.க.விற்கு வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
x
தினத்தந்தி 14 April 2019 11:00 PM GMT (Updated: 14 April 2019 8:42 PM GMT)

ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கவிடாமல் தடுத்த தி.மு.க.விற்கு வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

சாத்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் கொட்டும் முரசு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து சாத்தூர் தொகுதியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடந்த 29 நாட்களுக்கு மேலாக பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். சாத்தூர், வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வாக்கு சேகரித்து பேசியதாவது:–

மக்களால் நான், மக்களுக்காக நான் என்று வாழ்ந்த ஒரே தலைவர் ஜெயலலிதா தான். ஜெயலலிதா வழியிலே நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இன்று நல்லாட்சி நடத்திக்கொண்டிருக்கிறார்.முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் ஆகியோர் சாமானிய மக்களுடன் பழகி அடிப்படை தேவைகளை உணர்ந்து, அறிந்து, புரிந்து, கிராமம் முதல் நகரம் வரை ஏழை, எளிய, நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த சிறப்பு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பொங்கலுக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுடன் ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் அனைவருக்கும் தேர்தல் முடிந்தவுடன் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ரூ.2 ஆயிரம் வழங்கக்கூடாது என்று கோர்டில் தி.மு.க தடைகோரி வழக்கு தொடர்ந்துள்ளது. ரூ.2ஆயிரம் உதவித்தொகை வழங்கவிடாமல் தடுத்த தி.மு.க.விற்கு வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். தி.மு.க.வுக்கும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கும் யாரும் வாக்களிக்கக்கூடாது. தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தான் முல்லைப் பெரியாறு, காவிரி,கச்சத்தீவு உரிமைகளை எல்லாம் பறிகொடுத்தோம்.

இலங்கைத் தமிழர்கள் வாழ்வுக்கு உலை வைத்தவர்களும் தி.மு.க.,காங்கிரஸ் கூட்டணியினர் தான். இதை சிந்தித்துப்பார்க்கும் மக்கள் தி.மு.க. கூட்டணிக்கு நிச்சயம் வாக்களிக்க மாட்டார்கள்.இந்த நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மோடிதான் பிரதமராக வருவார். இந்தியா பலமுள்ள நாடாக இருக்கவேண்டும் என்றால், பாகிஸ்தான் போன்ற நாடுகள் நம்மை கண்டு பயம்கொள்ள வேண்டும் என்றால், மோடி போன்ற ஒரு துணிச்சலான பிரதமர்தான் இன்று நாட்டுக்குத் தேவை. எனவே வாக்காளர்கள், சாத்தூர் தொகுதி வாக்காளர்கள் கழக வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மனுக்கு இரட்டை இலை சின்னத்திற்கும், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் அழகர்சாமிக்கும் கொட்டும் முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.


Next Story