ஓசூரில் அ.தி.மு.க. வேட்பாளர் கிராமம், கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு


ஓசூரில் அ.தி.மு.க. வேட்பாளர் கிராமம், கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 15 April 2019 10:15 PM GMT (Updated: 15 April 2019 4:57 PM GMT)

ஓசூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜோதிபாலகிருஷ்ணரெட்டி கிராமம், கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஓசூர், 

வாக்குப்பதிவிற்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி, மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று அவர் தொகுதிக்கு உட்பட்ட பேரிகை, காட்டி நாயக்கன்தொட்டி, பி.எஸ்.திம்மசந்திரம், பி.குருபரபள்ளி ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் கிராமம், கிராமமாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர் பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், தனது கணவர் பாலகிருஷ்ணரெட்டி அமைச்சராக இருந்தபோது, ஓசூர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கொடியாளம் தடுப்பணையிலிருந்து மின் மோட்டார் மூலம், ஓசூர், பேரிகை பகுதியில் உள்ள 35 ஏரிகளுக்கு நீர் நிரப்ப நடவடிக்கை மேற்கொண்டார். இதன் மூலம் நிலத்தடி நீர் உயர்வு மற்றும் குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

மேலும் வளர்ச்சிப்பணிகள் தொடர்ந்திட தன்னை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து தன்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றும் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி கேட்டுக்கொண்டார்.

இந்த பிரசாரத்தின்போது, சூளகிரி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் சூளகிரி ஒன்றியக்குழு தலைவருமான ஏ.வி.எம்.மது என்ற ஹேம்நாத், பேரிகை முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சரவணன், சின்ன அப்பையா, கே.என்.தொட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் ஜெயசாரதி, பத்மா மற்றும் சிவா, தாஜூத்தீன், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.

Next Story