தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டியில் துணை ராணுவ வீரர்கள்- போலீசார் கொடி அணிவகுப்பு


தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டியில் துணை ராணுவ வீரர்கள்- போலீசார் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 15 April 2019 10:15 PM GMT (Updated: 15 April 2019 7:53 PM GMT)

தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி பகுதிகளில் துணை ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர்.

தேனி,

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது. இதற்காக துணை ராணுவ வீரர்கள் தமிழகத்திற்கு பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளனர். தேனி மாவட்டத்துக்கு துணை ராணுவ வீரர்கள் 6 அணியினர் வந்துள்ளனர். ஒரு அணியில் 70 பேர் வீதம் மொத்தம் 420 பேர் வந்துள்ளனர்.

அதுபோல், தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவை (பட்டாலியன்) சேர்ந்த போலீசார் 315 பேரும் தேனிக்கு வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களோடு தேனி மாவட்டத்தில் பணியாற்றும் 1,210 போலீசார், 243 ஆயுதப்படை பிரிவு போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் 20 பேர், முன்னாள் படை வீரர்கள் 560 பேர், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 100 பேர், ஓய்வு பெற்ற போலீசார் 10 பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில் தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி பகுதிகளில் துணை ராணுவ வீரர்கள், போலீசார் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர். தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு தொடங்கியது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில், துணை ராணுவ வீரர்களும், போலீசாரும் அணிவகுத்து சென்றனர்.

இந்த அணிவகுப்பு கம்பம் சாலை, நேரு சிலை சிக்னல், பெரியகுளம் சாலை வழியாக பொம்மையகவுண்டன்பட்டி சாலைப் பிள்ளையார் கோவில் அருகில் முடிவடைந்தது. அதேபோல், பெரியகுளம், ஆண்டிப்பட்டி பகுதிகளிலும் கொடி அணிவகுப்பு சென்றனர். இன்று (புதன்கிழமை) போடி, கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம் பகுதிகளில் இதுபோன்ற அணிவகுப்பு நடக்கிறது.

Next Story