கீரனூர், புதுக்கோட்டை பகுதிகளில் அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் வாக்கு சேகரிப்பு


கீரனூர், புதுக்கோட்டை பகுதிகளில் அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 15 April 2019 11:00 PM GMT (Updated: 15 April 2019 8:23 PM GMT)

கீரனூர், புதுக்கோட்டை பகுதிகளில் அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் வாக்கு சேகரித்தார்.

கீரனூர்,

திருச்சி நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா தொண்டைமான், கீரனூர் பஸ் நிலையத்தில் இருந்து வடக்குரத வீதி, தெற்குரத வீதி, கடைவீதி போன்ற பகுதிகளில் திறந்தவேனில் நின்றபடி பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் கூடிநின்று வரவேற்பு அளித்தனர்.

பின்னர் காந்தி சிலை அருகே திறந்தவேனில் நின்றபடி சாருபாலா தொண்டைமான் வாக்கு கேட்டு பேசினார். அவர் பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மன்னர் பரம்பரையான எங்களுக்கு சொந்தமான கலெக்டர் அலுவலக கட்டிடம், ராணியார் மருத்துவமனை கட்டிடம் போன்ற ஏராளமான சொத்துக்களை அரசுக்கு தானமாக கொடுத்து உள்ளோம். எனவே நான் பொறுப்புக்கு வந்து சொத்து சேர்க்க வேண்டிய அவசியமில்லை.

2 முறை எம்.பி.யாக இருந்த குமார் இந்த தொகுதி பக்கமே எட்டிப்பார்க்கவில்லை. ஆனால் என்னை எந்த நேரத்திலும் சந்தித்து குறைகளை கூறலாம். புதுக்கோட்டை, கீரனூர் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்குவேன். கீரனூர் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்வேன். ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலை கீரனூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பேன்.

கீரனூர் ரெயில்வே நிலையத்தில் இருந்து ஓ.வி.கே.நகர் செல்வதற்கு மேம்பாலம் மற்றும் கிராமப்புறங்களுக்கு செல்லுவதற்கு மேம்பாலம் அமைத்து கொடுப்பேன், என்று கூறி வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின்போது குன்றாண்டார்கோவில் கிழக்கு, மேற்கு ஒன்றிய செயலாளர்கள் கார்த்திக் பிரபாகரன், அண்ணாதுரை, மாநில இலக்கிய அணி செயலாளர் சுப்ரமணியன், நகர செயலாளர் சுப்ரமணியன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

இதேபோல் நேற்று இரவு புதுக்கோட்டை பகுதியில் சாருபாலா தொண்டைமான் வாக்கு சேகரித்தார். அவர் அய்யனார்புரம், காந்திநகர், உசிலங்குளம், பேராங்குளம், கீழராஜவீதி, அண்ணாசிலை, கீழ 2-ம் வீதி, கொட்டகை தெரு, மச்சுவாடி, அருங்காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் திருச்சி மாநகராட்சியில் மேயராக இருந்தபோது செய்த நலத்திட்டங்களை கூறி, நீங்கள் எனக்கு வாக்களித்தால், புதுக்கோட்டையில் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பேன். புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவேன் என்று கூறி பொதுமக்களிடம் ஓட்டு கேட்டார்.

Next Story