திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் பங்கேற்பு


திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 15 April 2019 10:30 PM GMT (Updated: 15 April 2019 8:57 PM GMT)

திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சமயபுரம்,

மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் உள்ள நீலிவனேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு சுவாமி கேடயத்தில் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அன்று முதல் தினமும் காலை பல்லக்கிலும், இரவு 7 மணிக்கு சிம்ம வாகனம், கிளி, யானை, அன்னம், பூத வாகனம் ஆகிய வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

திருவிழாவின் 6-ம் நாளான நேற்று சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த பக்தர்கள் தேங்காய், பழம், பூ மாலைகள் போன்ற பொருட்களை எடுத்து வந்திருந்தனர். தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் சொல்லி காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடத்தி வைத்தனர்.

தேரோட்டம்

இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு கைலாச வாகனம், அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடாகிறார். நாளை(புதன்கிழமை) இரவு 7 மணிக்கு சுவாமி தங்க குதிரை வாகனம், காமதேனு வாகனத்தில் எழுந்தருளி கோவிலை வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேே-்ராட்டம் 18-ந் தேதி(வியாழக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது.

19-ந் தேதி காலை 7 மணிக்கு தேர்கால் பார்த்தலும், நடராஜர் புறப்பாடு மற்றும் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இரவு கேடயத்தில் சுவாமி புறப்பாடாகிறார். 20-ந் தேதி இரவு முத்து பல்லக்கும், 21-ந் தேதி இரவு 7 மணிக்கு பஞ்சபிரகார நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 22-ந் தேதி காலை 7 மணிக்கு விடையாற்றி நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி மேற்பார்வையில் கோவில் செயல்அலுவலர் ஹேமலதா மற்றும் ஊழியர்கள், பக்த பிரமுகர்கள் செய்து வருகின்றனர்.

Next Story