புதுவை அருகே தி.மு.க. பிரமுகரை கொல்ல சதி; நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு; 2 பேர் படுகாயம்


புதுவை அருகே தி.மு.க. பிரமுகரை கொல்ல சதி; நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு; 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 15 April 2019 11:15 PM GMT (Updated: 15 April 2019 10:50 PM GMT)

புதுவை அருகே தி.மு.க. பிரமுகரை கொல்ல நடந்த சதியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வானூர்,

புதுவையையொட்டி உள்ள தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே காசிபாளையத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 35). தி.மு.க. பிரமுகர். இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் புதுச்சேரிக்கு வந்து விட்டு கோரிமேடு வழியாக பூத்துறை சாலையில் காசிப்பாளையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் பின்தொடர்ந்தது. நள்ளிரவு நேரத்தில் நீண்ட தூரம் பின்தொடர்ந்து வந்ததால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த உதயகுமார், செல்போன் மூலம் காசிபாளையத்தை சேர்ந்த தனது உறவினர் அருண்குமார் என்கிற மணிபாலனுக்கு (29) தகவல் தெரிவித்தார்.

உடனே அருண்குமார், தனது உறவினர்களான ராமமூர்த்தி, பன்னீர்செல்வம், சிவக்குமார் மற்றும் சிலரை திரட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிள்களில் காசிப்பாளையம் சாலையில் எதிரே வந்தார். அப்போது உதய குமாரை பின்தொடர்ந்து வந்தவர்களை அருண்குமார் தரப்பினர் வழிமறித்து, விசாரித்தனர்.

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த மர்ம ஆசாமிகள், அவர்கள் வைத்திருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து அருண்குமார் தரப்பினரை நோக்கி வீசிவிட்டு, மோட்டார் சைக்கிள்களில் தப்பிச்சென்றனர்.

குண்டு வீச்சில் அருண்குமார், ராமமூர்த்தி (27) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இருவரும் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வெடிகுண்டு வீச்சு பற்றி தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் மற்றும் வானூர் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் நேற்று காலை சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

வெடிகுண்டு வெடித்த இடத்தில் சிதறிக் கிடந்த துகள்களை நிபுணர்கள் சேகரித்து ஆய்வு செய்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது வெடிகுண்டு வெடித்த இடத்தில் இருந்து அங்குள்ள தைலமர தோப்பு வரை ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உதயகுமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பா.ம.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர்ந்தார். தற்போது நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

எனவே அரசியல் நோக்கத்துக்காக உதயகுமாரை மர்ம ஆசாமிகள் கொலை செய்ய திட்டமிட்டார்களா? வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தப்பியோடிய மர்ம ஆசாமிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்குமார் மேற்பார்வையில் வானூர் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் சரவணன் உள்பட 4 பேர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

வெடிகுண்டுகள் வீசப்பட்ட பகுதியில் தொழிற்சாலைகள் நிறைய உள்ளன. அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த சம்பவம் வானூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story