முகவர்கள் வாக்குச்சாவடிக்குள் செல்போன் பயன்படுத்த கூடாது அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலெக்டர் தகவல்


முகவர்கள் வாக்குச்சாவடிக்குள்  செல்போன் பயன்படுத்த கூடாது அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 16 April 2019 11:00 PM GMT (Updated: 16 April 2019 4:53 PM GMT)

முகவர்கள் வாக்குச்சாவடிக்குள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்தார்.

நாகர்கோவில்,

நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நாளில் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. குமரி மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

தேர்தல் நாள் அன்று (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட  நடைமுறைகளை  கடைபிடிக்க வேண்டும். அதாவது வாக்குச்சாவடியிலிருந்து 200 மீட்டருக்கு அப்பால் ஒரு மேஜை, இரண்டு நாற்காலிகள் போடும் அளவிற்கு தற்காலிக தேர்தல் அலுவலகம் அமைத்து கொள்ளலாம். சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப தற்காலிக அலுவலகத்தை குடை, தார்பால் அல்லது துணி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி அமைக்கலாம்.

வாக்குச்சாவடி முகவர்கள் வாக்குச்சாவடிக்குள்  செல்போன் பயன்படுத்த அனுமதியில்லை. வேட்பாளர்களோ அல்லது அவரது முகவர்களோ வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து செல்லவோ அல்லது  கொண்டு விடவோ செய்வது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 133–ன்கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். பிற்பகல் 3 மணிக்குபின் தேர்தல் ஆணையத்திடம் சான்று பெற்ற மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள் மட்டுமே வாக்குச்சாவடியின் உள்ளே அனுமதிக்கப்படுவர்.

முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வாக்களிக்க வரும்போது அவர்கள் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் செல்ல வேண்டும். அவர்களுடன் வரும் மற்ற நபர்கள் வாக்குச்சாவடிக்குள் செல்ல முயல்வது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரான செயலாகும்.

 வாக்குச்சாவடி முகவர்கள் யாரேனும் ஒருவர் மாறும்போது பதிவேட்டில் கையெழுத்திட்டு மாற்று முகவரை பிற்பகல் 3 மணிவரை மட்டுமே நியமிக்கலாம். வேட்பாளர்கள் 6 சட்டமன்ற தொகுதிக்கும், தொகுதி வாரியாக ஒரு முகவரை நியமிக்கலாம். வேட்பாளரோ, அவரது முகவரோ வாக்குச்சாவடிக்கு வாகனத்தில் வரும்போது, வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டருக்கு அப்பால் வாகனத்தை நிறுத்திவிட்டு வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும்.

வாக்குச்சாவடிக்கு முகவராக வரும் நபரின் வாக்காளர் அட்டையினை பரிசீலனை செய்த பின்னரே அனுமதிக்கபடுவர். குற்றம் உள்ளவராக இருப்பின் அனுமதிக்கப்படமாட்டார். வாக்குச்சாவடி முகவர்களுக்கு வாக்குச்சாவடிக்குள் உணவுகளை எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.

தேர்தல் பணிக்கு வந்த வெளி மாநிலங்களையோ, மாவட்டத்தையோ சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் யாராக இருப்பினும் மாவட்டத்தைவிட்டு வெளியேற வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, உதவி கலெக்டர் ‌ஷரண்யா அரி (பத்மநாபபுரம்), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகன்யா, வக்கீல் லீனஸ் ராஐ (தி.மு.க.), சேவியர் ஐயசதீஸ் (காங்கிரஸ்) மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Next Story