மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைவது உறுதி இறுதிக்கட்ட பிரசாரத்தில் தம்பிதுரை பேச்சு


மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைவது உறுதி இறுதிக்கட்ட பிரசாரத்தில் தம்பிதுரை பேச்சு
x
தினத்தந்தி 16 April 2019 11:00 PM GMT (Updated: 16 April 2019 8:42 PM GMT)

மத்தியில், பா.ஜ.க. ஆட்சி அமைவது உறுதி என்று இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது தம்பிதுரை கூறினார்.

கரூர்,

கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே அ.தி.மு.க. தேர்தல் பணிமனை முன்பாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தை நாடி பெறப்பட்ட வெற்றியையே தனது வாழ்நாள் மகிழ்ச்சியாக ஜெயலலிதா எண்ணினார். அவர் பெற்ற வெற்றியால்தான், தமிழகத்துக்குரிய தண்ணீரை கேட்டு பெற்று வருகிறோம். இதற்கெல்லாம் வேட்டு வைக்கும் விதமாக மேகதாதுவில் அணை கட்டுவோம் என ராகுல்காந்தி கூறுகிறார். எனவே கைக்கு வாக்களித்தால், தமிழகம் வறண்டு விடும். விவசாயம், குடிநீர் தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்காது.

ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் ஒவ்வொரு நிலைப்பாட்டுடன் இருப் பதால் மாயாவதி, முலாயம்சிங் யாதவ், அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, சந்திரசேகர்ராவ் ஆகியோர் ராகுல்காந்தியை பிரதமராக ஏற்கவில்லை. இதன் காரணமாக மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதி. கரூர் உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிகள், இடைதேர்தல்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

அ.தி.மு.க.வில் அனைத்து சுகங்களையும் அனுபவித்து விட்டு, தற்போது எங்களுக்கு எதிராக செந்தில்பாலாஜி திரும்பி இருப்பது மனதுக்கு கடினமாக இருக்கிறது. அவருக்கும், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

உங்களுடைய வாக்கு தம்பிதுரைக்காக அல்ல. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் இரட்டை இலைக்கு தான். என்னை வெற்றி பெற செய்தால் நாடாளுமன்றத்தில் மக்களுக்காக எனது குரல் ஒலிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், எதிர்கட்சியினரின் பொய் பிரசாரங்களையும், மனக்கோட்டையினையும் தவிடு பொடியாக்கும் வகையில் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தம்பிதுரையை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பிரசாரத்தின்போது கீதா எம்.எல்.ஏ., கரூர் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட துணைச் செயலாளர் பி.சிவசாமி உள்பட பலர் உடன் இருந்தனர். 

Next Story