மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி குழந்தைகளுடன் வந்த வாலிபர் தற்கொலை மிரட்டல் - கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி குழந்தைகளுடன் வந்த வாலிபர் தற்கொலை மிரட்டல் - கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 16 April 2019 10:30 PM GMT (Updated: 16 April 2019 9:46 PM GMT)

மனைவியை கண்டுபிடித்து தருமாறு 2 குழந்தைகளுடன் வந்த வாலிபர், கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை,

கும்பகோணம், பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகன் (வயது35). இவர் தன்னுடைய மகன், மகளுடன் நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கண்ணீரும், கம்பலையுமாக நின்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் கூறியதாவது:-

எனக்கு கடந்த 9 வருடத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர் பிரியா. எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி என்னுடைய மனைவி குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதாக கூறி வெளியில் சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் செய்தேன். அவர் கள் என்னுடைய மனைவி செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்த போது கோவை பகுதியில் அவர் இருப்பது தெரிய வந்தது. ஆனாலும் கடந்த ஒரு மாதமாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆகவே எனது மனைவியை கண்டு பிடித்து தர வேண்டும்.

மனைவியை கண்டுபிடித்து தராவிட்டால் நான் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார். போலீசார் வாலிபரையும், 2 குழந்தைகளையும், போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தற்கொலை மிரட்டல் விடுப்பது தவறு என்று வாலிபரை எச்சரித்தனர்.

இதுபோன்று இனி நடந்துகொள்ள மாட் டேன் என்று முருகனிடம் போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். கலெக்டர் அலுவலகத்துக்கு குழந்தைகளுடன் வந்து வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story