5 நாட்கள் தொடர் விடுமுறை சொந்த ஊருக்கு செல்லும் ஆர்வத்தில் பஸ்-ரெயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் வாக்குப்பதிவை பாதிக்குமா?


5 நாட்கள் தொடர் விடுமுறை சொந்த ஊருக்கு செல்லும் ஆர்வத்தில் பஸ்-ரெயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் வாக்குப்பதிவை பாதிக்குமா?
x
தினத்தந்தி 16 April 2019 10:28 PM GMT (Updated: 16 April 2019 10:28 PM GMT)

5 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலியாக சொந்த ஊருக்கு செல்லும் ஆர்வம் காரணமாக பஸ்-ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இது வாக்குப்பதிவை பாதித்துவிடுமோ? என்ற கேள்விக்குறியை எழுப்பி இருக்கிறது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ‘100 சதவீதம் வாக்குப்பதிவு’ என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் தீவிர விழிப்புணர்வை முன்னெடுத்து வருகிறது. ‘அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளுடன் எல்லா வடிவங்களிலும் தீவிர விழிப்புணர்வு பிரசாரத்தை முழுமூச்சாக தேர்தல் ஆணையம் கையாளுகிறது.

இந்தநிலையில் பண்டிகை காலத்தை போலவே தொடர் விடுமுறை வருவதால் இது ஏதாவது ஒரு வகையில் வாக்குப்பதிவில் தாக்கத்தை ஏற்படுத்தி விடுமோ? என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மகாவீர் ஜெயந்தி இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. நாளை (வியாழக்கிழமை) நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. நாளை மறுதினம் புனித வெள்ளி (வெள்ளிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இந்த 3 நாட்களும் அரசு விடுமுறை ஆகும். இதற்கு அடுத்து வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை நாளாக அமைகிறது. அந்தவகையில் இன்று முதல் 5 நாட்கள் தொடர் விடுமுறை வந்திருக்கிறது.

பொதுவாக பண்டிகை உள்ளிட்ட காலங்களில் தொடர் விடுமுறையை சொந்த ஊரில் கழிக்கவே பொதுமக்கள் விரும்புவார்கள்.

அந்தவகையில் சொந்த ஊருக்கு செல்லும் ஆர்வத்தால் சென்னையில் உள்ள பஸ்-ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் நேற்று அலைமோதியது. சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள் பயணிகளின் மிகுதியான கூட்டத்தால் திக்குமுக்காடியது. குறிப்பாக தென்மாவட்டங்களை நோக்கி இயக்கப்படும் ரெயில்களில் அதிக கூட்டத்தை பார்க்கமுடிந்தது.

சென்னை கோயம்பேடு பஸ் நிலைய வளாகத்தில் எங்கு திரும்பினாலும் மனித தலைகளாகவே காட்சியளித்தது. அந்தளவு கூட்டம் நிறைந்து இருந்தது. தொடர் விடுமுறை காரணமாக கூட்டம் நிரம்பி வழியும் என்பதால் முன்கூட்டியே சிறப்பு பஸ்கள் இயக்கவும் அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர். அந்தவகையில் நேற்று இரவு 650 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று 1,500 பஸ்கள் இயக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்படி பஸ்களிலும், ரெயில்களிலும் ஏராளமானோர் சொந்த ஊருக்கு சென்றுவிட்டதால், தேர்தல் வாக்குப்பதிவை பாதிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த ஊரில் ஓட்டு இருந்தால் பரவாயில்லை என்று விட்டுவிடலாம்.

ஆனால் சென்னையில் ஓட்டுப்போட தயாராக இருந்தவர்களும் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு சென்றது தேர்தல் ஆணையத்துக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் எதிர்பார்த்த வாக்குப்பதிவு சதவீதம் கிடைக்குமா? என்ற கேள்விக்குறியும் எழுந்து உள்ளது.

Next Story