சின்னசேலம் அருகே பரிதாபம், சத்து மருந்து கொடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை சாவு - போலீசார் விசாரணை


சின்னசேலம் அருகே பரிதாபம், சத்து மருந்து கொடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை சாவு - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 17 April 2019 10:30 PM GMT (Updated: 17 April 2019 7:08 PM GMT)

சின்னசேலம் அருகே சத்து மருந்து கொடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை பரிதாபமாக இறந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சின்னசேலம்,

சின்னசேலம் அருகே உள்ள தகரை தெற்கு காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 31). இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மீண்டும் கர்ப்பிணியான சசிகலாவுக்கு கடந்த 11-ந் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் மாலை சசிகலா தனது குழந்தைக்கு சத்து மருந்து புகட்டினார். பின்னர் சிறிது நேரத்தில் குழந்தையின் வாயில் இருந்து நுரை தள்ளியது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சசிகலா மற்றும் உறவினர்கள் குழந்தையை மீட்டு மேல்நாரியப்பனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று குழந்தை இறந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து ஒரு வாரமே ஆன நிலையில் சத்து மருந்து குடித்த பச்சிளம் குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story