துபாயில் இருந்து திருச்சி வந்த கட்டிட தொழிலாளி கடத்தல் 4 பேர் கைது; 2 பேர் தலைமறைவு


துபாயில் இருந்து திருச்சி வந்த கட்டிட தொழிலாளி கடத்தல் 4 பேர் கைது; 2 பேர் தலைமறைவு
x
தினத்தந்தி 17 April 2019 10:15 PM GMT (Updated: 17 April 2019 7:22 PM GMT)

துபாயில் இருந்து திருச்சி வந்த கட்டிடத்தொழிலாளியை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

செம்பட்டு,

அரியலூர் மாவட்டம் செந்துறை பெரிய குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். இவர் துபாயில் கட்டிட தொழிலாளியாகவேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் அவர் திருச்சிக்கு புறப்பட்டு வந்தார்.

ஆனால் திருச்சிக்கு வந்து 2 நாட்கள் ஆகியும், அவர் வீட்டுக்கு வராததால் கொளஞ்சிநாதனின் மனைவி திருச்சி விமான நிலைய போலீஸ் நிலையத்தில் இதுபற்றி புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

கடத்தல்

விசாரணையில், கொளஞ்சிநாதன் துபாயில் இருந்து வரும்போது, அவருக்கு அறிமுகம் இல்லாத ஒருவர், 5 பவுன் சங்கிலியை கொடுத்து, அதை திருச்சி விமான நிலையத்தில் உள்ள தனது உறவினரிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார். கொளஞ்சிநாதன் விமானத்தில் ஏறியதும், தங்கத்தை கடத்துவதாக போலீசார் தன்னை பிடித்துக்கொள்வார்கள் என்று பயந்து, அந்த சங்கிலியை விமான இருக்கையின் முன் உள்ள பையில் போட்டு விட்டு, விமான நிலையத்தில் இருந்து இறங்கிவிட்டது தெரியவந்தது. ஆனால் அந்த சங்கிலிக்காக திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்த திருச்சி வரகனேரியை சேர்ந்த வாஹீத், கொளஞ்சிநாதனிடம் சென்று தங்க சங்கிலியை கேட்டுள்ளார். அதற்கு அவர் விமான இருக்கையில் வைத்து விட்டு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வாஹீத் தனது நண்பர்கள் ரஷீத், பயாஸ்(20), அஸ்லாம்(22), திப்புசுல்தான்(42), சாதிக்அலி(35) ஆகியோருடன் சேர்ந்து கொளஞ்சிநாதனை கடத்தி சென்றது தெரியவந்தது. இதைதொடர்ந்து கொளஞ்சிநாதனை மீட்ட போலீசார் பயாஸ், அஸ்லாம், திப்புசுல்தான், சாதிக்அலி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும், வாஹீத், ரஷீத் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story