பிவண்டியில் பரபரப்பு துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் உடல் மீட்பு போலீசார் விசாரணை


பிவண்டியில் பரபரப்பு துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் உடல் மீட்பு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 17 April 2019 11:00 PM GMT (Updated: 17 April 2019 10:59 PM GMT)

பிவண்டியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பெண் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தானே,

பிவண்டியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பெண் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலையில்லாத உடல்

தானே மாவட்டம் பிவண்டி சோனாலே கிராமத்தில் சந்தேகத்துக்கு இடமாக பிளாஸ்டிக் டிரம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று டிரமை திறந்து பார்த்தனர்.

அப்போது அதற்குள் 3 துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் பெண் உடல் கிடந்தது. இதைப்பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் பெண்ணின் கால்கள், வலது கை மற்றும் தலை ஆகிய உறுப்புகள் அங்கு இல்லை.

இதையடுத்து போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரபரப்பு

இதுகுறித்து தானே புறநகர் போலீஸ்நிலைய போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பிணமாக மீட்கப்பட்ட பெண்ணுக்கு 20 முதல் 30 வயது இருக்கும். பெண்ணின் அடையாளத்தை மறைக்க தலை, கை, கால்களை வெட்டி எடுத்து உள்ளனர். அருகில் உள்ள பகுதிகளில் அந்த உடல் பாகங்களை தேடி வருகிறோம்.

பிணமாக மீட்கப்பட்ட பெண் பிவண்டி பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகப்படுகிறோம். எனினும் தானேயில் உள்ள எல்லா போலீஸ் நிலையங்களிலும் சமீபத்தில் மாயமானவர்கள் தொடர்பாக வந்த புகார் விவரங்களை கேட்டுள்ளோம். கொலையாளிகள் யார் என்பது பற்றியும் விசாரித்து வருகிறோம்’’ என்றார்.

துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பெண் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பிவண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story